பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

135



அவன் மட்டும் நிறம் மாறவில்லை. கொள்கை மாறாதவன் என்ற கருத்தினை ‘மாண் நிறத்தான்’ என்ற சொல்லாட்சியில் உணர்த்தக் காண்கிறோம்.

‘அப்புள்’ என்ற சொல்லில் இருவேறு பொருள் உண்டாக்கித் தருவது ‘யமகம்’ என்று கூறுவர். சிலேடை என்பது ஒரே தொடருக்கு இரண்டு பொருள்கள் தோன்ற அமைத்தல் என்பர். இது இருவேறு இடத்தில் இருவேறு பொருள் தோன்ற அமைக்கப்படுவது தனிச்சிறப்பு ஆகும்.

“அப்புள் தோன்றும் முளரியில் வைகும் அன்னம்” என்கிறார். அப்புள் என்றால் தண்ணீர் என்பது பொருள். ‘நீரில் தோன்றும் தாமரை’ என்பது அதன் பொருள் ஆகிறது. அடுத்த வரியில் ‘அன்னப்புள்’ - அன்னப் பறவை என்று கூறுகிறார்.

‘முன்னப்புள் அன்னப்புள்’ என்று கூறுவது சொல்லாட்சிச் சிறப்புத் தருகிறது.

6. அணி நடை மணி நடை

“அன்னமே நீ அஞ்சாதே! உன் அழகிய நடையும் மகளிர் மாட்சிமிக்க நடையும் ஒப்பிட்டுக் காணவே உன்னைப் பிடித்துவரச் செய்தேன்” என்கிறான் நளன்.

அன்னத்தின் நடை அழகு மட்டும் கொண்டது. மகளிர் நடை மதிக்கத் தக்கது என்ற பொருள் வேறுபாடு தோன்ற மணிநடை என்று கூறுவது தனிச்சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது.

அஞ்சல் மடவனமே உன்றன் அணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன்