பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

141



‘யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்’ என்றார் வள்ளுவர்.

அவளும் நோக்கினாள் என்றால் அது அவள் பெண்மைக்குச் சிறிது இழுக்காகிவிடும். கம்பரைப் போல் இவர் கூற்று அமையாமல் அவன் நோக்கில் அவள் மலர்ச்சி பெற்றாள் என்பது புகழேந்தியின் சொல்லாட்சிச் சிறப்பு; தனித் தன்மையும் ஆகிறது.

தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு
மதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மில்
பொதுநோக்கு எதிர்நோக்கும் போது

15. அந்திப் பொழுது

அந்திப் பொழுதை வருணிக்கிறார் கவிஞர். மல்லிகை முகைகள் விரிகின்றன; பூக்கின்றன. மற்றும் பல்வகை மலர்கள் பூத்து அழகு செய்கின்றன. முல்லை எனும் பூவும் பூத்து அழகு செய்கிறது. மாலையாகிய அந்திப்பொழுது மெல்ல வந்து சேர்கிறது என்கிறார் கவிஞர். இதனை உருவகத்தில் கூறுவது தனிச்சிறப்புப் பெறுகிறது.

சங்குகளில் வண்டுகள் வாய் வைத்து ஊதுகிறது. மன்மதன் மெய்க் காவலனாக வருகிறான். மெல்ல நடந்து வருகிறது மாலைப் பொழுது தோளில் முல்லை மாலை ஏற்று என்கிறார். அழகிய உருவகமாக இக்கவிதை அமைகிறது.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையென்னும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது