பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

17



அவனால் தாங்கவே முடியவில்லை. “காதல்” அது வேதனையைத் தந்ததது.

“இந்தக் குயிலைப்போல் யான் அவளோடு பேசி மகிழமாட்டேனா” என்று ஏங்கினான்.

எந்த அழகிய காட்சியைக் கண்டாலும் அவன் மனம் இளகியது. அவன் முன் மயில் ஒன்று தோகை விரித்து ஆடியது. அதனைக் கண்டான். அவள் மென்மையான சாயல் அவன் கண்முன் நின்றது. அவளே வந்து முன் நிற்பது போல் தோன்றியது. அவன் உள்ளம் கலங்கினான்; “அவள் பேரழகைக் கண்டு மனம் மகிழ மாட்டோமா” என்று ஏங்கினான்.

குயிலைக் கண்டான். அதன் குரல் கேட்டு மனம் நைந்தான். மயிலைக் கண்டான். அதன் ஒயில் பார்த்து மனம் அழிந்தான். அங்கே பூங்கொடி ஒன்றைக் கண்டான். அவளே ஒசிந்து நிற்பதுபோல் அது காட்சி அளித்தது. அவளுக்கு உவமையாகக் கூடிய அக்கொடியைப் பார்த்து ‘நீங்களாவது என்னுடன் உரையாட மாட்டீர்களா?’ என்று ஆற்றாமையால் பேசினான்.

“நீங்கள் மிகவும் கொடியவர்கள்” என்று கூறினான். “கொடியிர்!” என்று கூறிக் கரங் கூப்பித் தொழுதான். அச்சமும் ஆர்வமும் அவன் சொற்களில் கலந்து ஒலித்தன.

“என் காம வேட்கையை நான் தீர்த்துக் கொள்வேன்” என்று பேசி மன ஆறுதல் அடைந்தான். “கொங்கை இளநீரால் குளித்து மகிழ்வேன்” என்று பேசினான். “அவள் சொற் கரும்பைச் சுவைப்பேன்” என்றான். “அவள் பொங்கு சுழி என்னும் தடத்தில் முழுகித் திளைத்து மகிழ்வேன்” என்று கூறினான். “என் வெப்பமிகு காம நோயினை அவள் நறுங் கூந்தலின் நிழலில் ஆற்றிக் கொள்வேன்” என்றும் பேசினான்.