பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

19



“ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை” என்று இறுதியில் முத்தாய்ப்பு வைத்ததுபோல் கூறியது.

அடுத்தது தெய்வம் கூட இவனுக்கு ஒப்பாக மாட்டாது என்று கூறிப் புகழ்ச்சியின் எல்லையைத் தொட்டுக் காட்டியது. “இவன் அறத்தைத் தேடிச் செல்லவில்லை; மறத்தை நாடி இவன் முயலவில்லை".

“அவை தாமே அவனிடம் வந்து தங்கிவிட்டன. அவன் பார்வை அருள் நோக்கம் கொண்டது” என்றும் கூறியது. இதனை மிக அழகாகக் கூறியது.

அன்னத்தின் சொல்திறம், அவள் தனிமை, வாலிப வயது, மன்மதன் வில்லம்பு துளைத்தது; அதனால் அவள் என்ன ஆனாள்? இளைத்தாள்’ என்று கூறுவது அவசரப்பட்டுக் கூறும் சொல்லாகிவிடும். வெளுத்தாள்’ என்பதுதான் பொருந்தும். சிவந்து இருந்த அவள் முகம் வெளுத்துவிட்டது. காதல் ஏக்கம் அவளைத் தழுவியது; அவன் நினைவு அவளை வாட்டியது. மேனி விளர்த்தாள்’ என்று கூறும் நிலையை அடைந்தாள்.

மன்னன் மனத்து எழுந்த காதல் மயக்கம் அத் துணையையும் அது விவரித்துக் கூறியது. அதனைக் கேட்டு அவள் உள்ளம் உருகினாள். அவனைத் தழுவிக் கொள்ள விழைந்தாள். ஆர்வம் மிக்கவள் ஆயினாள். அவள் தன் முலை முகத்தைப் பார்த்து மயங்கினாள். அவள் வேறு என்ன செய்ய முடியும்.

அவளும் மனம் பதைத்துப் பார்வேந்தனுக்குத் தன் செய்தி கூறுமாறு வேண்டினாள். “வாவிகளில் உறையும் இள அன்னமே! நீ சென்று அவனிடம் பேசினால் என் உயிரைப் பாதுகாத்தவள் ஆகிறாய்; மறுபடியும் செல்க; அச்சோலையிடத்தே தேர்வேந்தனுக்கு என் நிலைமை நீ சென்று உரைப்பாய்; இது என் வேண்டுகோள்” என்று உரைத்தாள்.