பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

புகழேந்தி நளன் கதை



“அரச மகள் திருமணம் என்றால் அனைத்து அரசர்கள் செல்வது ஏன்? அவ்வாறு செல்லக் காரணம் என்ன? அவள் என்ன பேரழகியா? எழில் நலத்தால் சிறந்தவளா?” என்று கேட்டான்.

நாரதன் நயம்படக் கூறுவதில் வல்லவன் என்பதைக் காட்டிக் கொண்டான். “அவள் பேரழகி” என்றான். “அழகு சுமந்து இளைத்த மேனியாள்” என்று கூறினான். “வண்டு பழகு கருங்கூந்தல் பாவை” என்றும் கூறினான்.

இந்திரனுக்கு வியப்பு உண்டாயிற்று. “அவள் அழகி என்பதால் இவர்கள் அங்குச் சென்றுமொய்த்துள்ளனர். அவளைத் தானும் காண வேண்டும்” என்று விரும்பினான்.

“அவள் வீமனின் ஒரே மகள். அந்த அரச குலத்துக்கு அவள் ஓர் ஒளித் தீபம்” என்று கூறினான்.

“கவர்ச்சி மிக்கவள்: இளைஞர்கள் கருத்தைக் கவர்ந்தவள்; மன்மதன் அவளை நம்பித்தான் வாழ்கிறான்; அவன் படைக்கு அவள் ஒரு சேமநிதி; அவனுக்கு அவள் ஒரு காப்பு” என்றும் கூறினான்.

அவள் மேனி அழகும் வடிவும் பெரிதும் பேசப்பட்டன. அவள் வீமன் மகள் எனவும், மன்மதன் படைக்கு அவள் ஒரு காப்பு எனவும் எடுத்து உரைத்தான்.

பழகு தமிழ் அவனுக்கு இந் நா நயத்தைத் தந்தது. “அழகு சுமந்தாள். அதனால் இளைத்துவிட்டாள்” என்று கூறியது இந்திரனைச் சிந்திக்க வைத்தது. அவள் பேரழகி; மெல்லியள் என்பது அவனைத் தூண்டியது.

தேவர்கள். கருத்து மண்மகள்மீது சென்றது. வச்சிரப் படை தாங்கியவன் இந்திரன்; ஆட்சி பீடம் ஏறிய அவனுக்குப் புதிய விருப்புத் தோன்றியது; உடன் இருந்த தேவர்களுக்கும் இந்தப் புதிய விருப்பு எழுந்தது.