பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

25



“ஏன் நாமும் செல்லக் கூடாது” என்று இந்திரன் கேட்டான்.

அருகிருந்த அக்கினி, வருணன், இயமன் அவர்களும் தாமும் உடன் வருவதாக உரைத்தனர்.

அவள் மாலையிடுகிறாள் என்றால் அது தமக்கு ஏன் வாய்க்கக் கூடாது என்று நினைத்தனர். உடனே அவர்கள் விண்ணாடு விட்டு மண் உலகை நாடிச் சென்றனர்.

நளன் மிகவிரைவாகத் தேரில் வருவதைக் கண்டனர். இழந்துவிட்ட பொருளைத் தேடுபவன்போல் பறிகொடுத்த மனத்தை நாடுவது போல் வெகு வேகமாகச் சென்று கொண்டிருந்தான். தமயந்தியின் நினைவு தவிர வேறு எதுவும் அவன் உள்ளத்தில் இடம் பெறவில்லை.

அவன் எதிரே இந்தத் தேவர்கள் தலைவன் சென்றான்; தடுத்து நிறுத்தினான்.

எதிரே இருப்பவன். இந்திரன் என்பதை அறிந்தான். அவனைக் கண்டு வியப்பு அடைந்தான். தன்னை இவன் ஏன் சந்திக்க வேண்டும் என்று எண்ணிப் பார்த்தான்.

“இட்ட வேலையை இட்டமுடன் செய்வாயோ?” என்று கேட்டான்.

திட்டமிட்டு அவனை அணுகினார்கள் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.

வாய்மை வீரன்; கேட்டவர்க்கு இல்லை என்று சொல்லிப் பழக்கம் இல்லை.

“ஏவல் இட்டால் செய்வேன்” என்று அந்தக் காவலன் உரைத்தான்.

நா காக்க வேண்டியவன் அதை மறந்து விட்டான். அவசரப்பட்டு வாக்களித்து விட்டான்.