பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

29



“இங்கே வந்தது காதல் சந்திப்பு அன்று; கடமை ஒன்று ஏற்று வந்திருக்கிறேன்” என்றான்.

காதலனை அவள் கண் குளிரக் கண்டாள். பேதமுறப் பேசுவது அவளுக்கு வியப்புத் தந்தது.

“தேவர் கோமான் ஏவல் ஒன்று இட்டான். அவன் உதவியால் காவலைக் கடக்க இயன்றது” என்று விளக்கினான்.

“இந்திரன் ஏவலால் வந்தேன்” என்று கூறியது அவளுக்குப் புதுமையாக இருந்தது.

“நான் கூறுவதை இகழாமல் ஏற்றுக் கொள்க; உள்ளம் வேறுபாடு இல்லாமல்தான் உரைக்கின்றேன். என் காதல் அதனைப் புதைத்து வைத்து விட்டேன். நீ ஏந்தும் பொன்மாலை அதனைப் பொன்னுலகம் காக்கும் புரவலனுக்குச் சூட்டுக; இதுதான் என் வேண்டுகோள்; இந்திரன் இட்ட ஏவல்; அதுதான் என் ஆவலும் ஆகும்” என்று உரைத்தான்.

அவள் சிந்தித்துப் பார்த்தாள். அவன் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவிக்கிறான் என்பதை அறிந்து கொண்டாள். அதனால் அவள் அதிர்ச்சி அடையவில்லை.

அவன் தன் கடமையைச் செய்கிறான் என்பதை அறிந்தாள்; அவள் நேர்மையை மதித்தாள்.

“உண்டு இல்லை” என்று கற்கண்டு போன்ற சொல்லாள் ஏதும் கூறவில்லை.

தேவர்கள் விருப்புக் கொள்வது அவர்கள் உரிமை; இருந்தாலும் அவர்கள் அவனை அனுப்பி நேர்மை தவறி விட்டார்கள் என்பதை அறிந்தாள்.

அவள் என்ன விடை தரப்போகின்றாள் என்பதைக் கேட்க ஆவலுடையவனாக விளங்கினான்.