பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

புகழேந்தி நளன் கதை



கடைவாயில் தாளின் பால் ஒழுகியது; இது மச்ச நாட்டின் பெருமை என்று கூறினாள்.

குவளைப் பூவைப் பறித்துத் தின்ன எருமைக் கடா விரும்பியது. அந்தப் பூவில் படிந்திருந்த வண்டுகள் பாடிய பண்ணிசை கேட்டு அது உண்ணாமல் நின்று விட்டது. அத்தகைய பெருமை உடையவன் அவந்தி நாட்டின் அரசன் என்றாள்.

மீன் பிடிக்கும் தூண்டில் அதனை மேலே நிமிர்த்த அதன் கொக்கி கமுக மரத்தின் பாளையைத் தைக்க அதிலிருந்து விழுந்த தேன் செந்நெற்பயிர்களுக்குப் பாய்ந்தது. அத்தகைய சிறப்பு உடையவன் பாஞ்சால நாட்டு அரசன் என்றாள்.

செந்நெல் அரிவார் தம் கொடுவாளைச் சினையோடு கூடிய ஆமையின் முதுகில் தீட்டுவர். அத்தகைய வளம்மிக்க நாடு கோசல நாடு என்று குறிப்பிட்டாள். அதனை ஆளும் அரசன் என்று அவனைக் காட்டினாள்.

தாமரை மலர்கள் மிக்கு விளங்கும் பொய்கைகளை உடைய நாடு மகத நாடு என்றாள். நெருப்புப் போல் அப்பூக்கள் காட்சிஅளித்தன. அதன்மேல் படியும் வண்டுகள் புகைபோல் காட்சி அளிக்கின்றன என்றாள்.

சங்கு ஈனும் முத்துகள் பவளக் கொடியில் சிக்கிக் கொள்கின்றன. அவற்றைக் கடல் தன் அலைக்கரத்தால் எடுத்துச் சென்று காக்கிறது. அத்தகைய நாட்டை உடையவன் அங்கநாடன் என்றாள்.

எருமைகள் நீரில் படிய வாளை மீன்கள் துள்ளி எழுந்து தாமரைப் பூக்களைக் கலக்குகின்றன. அதனால் அப்பொய்கையில் உள்ள வண்டுகள் சிதறிப் பறக்கின்றன. அத்தகைய சிறப்பு உடையது கலிங்க நாடு என்றாள்.