பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

63



விளக்கம் தந்தனர். கள் உண்பது; பொய் பேசுதல்; ஈவதைத் தடுப்பது இவை எல்லாம் செம்மை நீங்கிய நெறிகள்” என்று கூறினார்.

“இதனை அறிவாளிகள் நெருங்கவே மாட்டார்கள். இவை செய்யும் தீமைகள் இவை” என்று எடுத்துக் கூறினார்.

“அறத்தை அழிக்கும்; நரகிற் சேர்க்கும்; அருள் உள்ளத்தை மாய்க்கும். பகைமையை உண்டாக்கும். அதனால் பொய்ச் சூதினை அறிவாளிகள் நாட மாட்டார்கள்” என்றும் கூறினர்.

“அது மட்டும் அன்று; உருவை அழிக்கும். உயர்வினைச் சிதைக்கும். செல்வத்தை ஒழிக்கும். மானம் சிதைக்கும். நட்பினைத் தகர்க்கும். அன்பினை அழிக்கும். இன்னும் எவ்வளவோ தீமைகளைக் கூற முடியும்” என்றனர்.

“அது மட்டும் அன்று; சூதும் மாதும் வேதனை செய்யும்” என்று அறிவித்தனர். பொது மாதர், சூது இவற்றில் தொடர்பு கொண்டால் விடவே முடியாது; பற்றிக் கொள்ளும்” என்று கற்ற அந்த அமைச்சர்கள் கூறினர்.

அமைச்சர்கள் அவர்கள் தம் தொழிலைச் செய்து முடித்தனர். அரசன் இவன்; அவர்கள் அறிவுரை கேட்பது அவன் தொழில்; கடமை. அரசர்களுக்கு அறிவுரை கூறுவது அவர்கள் தொழில்; கடமை. அதற்குரிய மதிப்பைத் தந்தான்.

அவர்கள் கூறுவது தக்கதுதான்; ஏற்கத்தக்கவை; என்றாலும் அவன் வார்த்தை தந்து விட்டான். அவசரப் பட்டு ஆடுவதாக அறிவித்தான். பின்பு அதை மாற்றுவது என்றால் அது மன்னனுக்கு இழுக்கு என்பதை உணர்ந்தான். அவர்களுக்கு அதை உணர்த்தினான்.