பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

புகழேந்தி நளன் கதை



அவனை மீட்க முடியாது என்பதால் அவர்கள் அடங்கி நின்றனர்.

“நல்லது நடக்கட்டும்; தீயது தொடரட்டும்; வெற்றியோ தோல்வியோ எதைப் பற்றியும் கவலை யில்லை. வார்த்தை தந்துவிட்டேன். மீள மாட்டேன்” என்று தன் மன உறுதியை வெளிப்படுத்தினான்.

“என்னைத் தடுக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தினான்.

அமைச்சர்கள் தம் கடமையைச் செய்தனர். “ஆகுவது ஆகுங் காலத்து ஆகும்; அழிவது அதை யாரும் தடுத்த நிறுத்த முடியாது. போகுவது அவன் புத்தி செல்லும் வழி” என்று கூறிக் கொண்டு ஆறி அடங்கினர்.

மேடை ஒன்று அமைக்கப்பட்டது. மெத்தைகள் விரிக்கப்பட்டன. எதிர் எதிர் அமர்ந்தனர். சூது பலகை விரிக்கப்பட்டது. புரட்டும் கவறு முன்கொண்டு வந்து வைக்கப்பட்டது. ‘கவறு’ என்று அதனைக் கழறினர். கையில் அதனைப் புட்கரன் எடுத்தான். உருட்டுவதற்கு முன்னால் தொடக்கவுரை நிகழ்த்தினான்.

“ஒட்டுப் பந்தயம் யாது?” என்று கேட்டான்.

“காசு வைத்து ஆடாவிட்டால் இந்த ஆட்டம் மாசுபடும்” என்று கூறினான்.

“காசு வைத்து ஆடினால்தான் ‘காரமே’ பிறக்கும்; சூடு பறக்கும்; ஆடுவதற்கும் பிடிக்கும்” என்று கூறினான்.

நளன் செல்வம் மிக்கவன்; கழுத்தில் அணிந்திருந்த மாலையைக் கழற்றினான்; பூண்டிருந்த பொன் மாலையை முன் வைத்தான்; “இதற்கு நிகர் நீ என்ன வைக்கிறாய்” என்று கேட்டான்.