பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

புகழேந்தி நளன் கதை




“வைப்பதற்கு இனி யாதும் இல்லை” என்பதால் செயல் இழந்தான்.

“வைப்பு என்பது யாதும் இல்லை” என்று கை விரித்தான்.

“மனையாள் அவள் ஒருத்தி அவளையும் வைத்து ஆடலாமே” என்றான்.

சுருக்கு என்று தைத்தது; எதிரியின் துணிவு அவனை அதிர வைத்தது.

காதல் மனைவி அவள் உயிரோடு ஒன்றியவள்; அவளையும் வைக்க என்றது அவன் உள்ளத்தில் சென்று தைத்தது.

“இனி இந்த இடம் நமக்குத் தகாது; பொன்மகளே; எழுக” என்றான். அருகில் இருந்த தன் மனையாளை நோக்கி “மிகவும் கொடியவன் அவன்” என்பதை அறிவித்தான்.

உடைமைகள் அனைத்தையும் இழந்தான். அதற்காக அவன் கலங்கவில்லை; மீட்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மாசு இல்லாத மனைவியை அவன் தூசுப்படுத்த நினைத்தது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எழுந்தான்; உடன் எழுந்தாள்; நடந்தான். அந்த அரங்கை விட்டு அகன்றான். மனையைவிட்டு நீங்கினான்.

நேற்றுவரை அவன் அரசன்; இன்று அவன் ஒரு குடிமகன்; அந்தக் குடிமையையும் புதியவன் மறுத்தான். நாட்டை விட்டு நீங்குவது தவிர வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.

தாமரை மலரில் தங்கும் அன்னம் அது அமரும் இடத்தில் ஒரு காக்கை அதைக் கவர்ந்து விட்டது; அங்கு அமர்ந்து விட்டது.