பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

புகழேந்தி நளன் கதை



இஷ்டமுள்ளவர்கள் நமக்கு இருக்கும்போது நிஷ்டை செய்வது ஏன்?” என்று கேட்டாள்.

இந்த எளிய வழி நளன் அறிந்தது. மாமனார் அவர் மதிக்கத் தக்கவர் என்றாலும்கூட உறவு ஊனம் பெறக் கூடாது என்றான்.

இல்லாமை அதன் காரணமாகச் செல்வது என்பது ஒன்று. மற்றொன்று அவர் பேரரசர்; அவர் கீழ் இருந்து வாழ்வது மற்றொன்று. இந்த இரண்டும் தனக்கு ஒவ்வாது என்று கூறினான்.

“இல்லை என்று சொல்லி இரந்து கேட்பது இழிவானது. மானம் கெட்டு வாழ்வது இனியது அன்று” என்று கூறினான்.

மற்றும் மன்னன் ஒருவன் மற்றொரு அரசன் நிழலில் வாழ்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அது பித்தர் செயல் ஆகும்; அல்லது பேடியர் செயலாக இருக்க வேண்டும். அந்த நிலைக்கு யான் செல்லவில்லை. என்னால் செல்ல இயலாது; அது கூடாது” என்று பெருமை குறையாமல் பேசினான்.

ஆண்டுகள் பல பழகியவள்; அவனை நன்கு அறிந்தவள்; அறங்கிடந்த நெஞ்சும், மறங்கிடந்த தோளும், திண்தோள் வலியும் அறிந்தவள். செம்மனத்தான்; செங்கோலான்; அவன் தன் நிலை சாயான் என்பதை அறிந்தவள். அதனால் அதற்குமேல் அவள் சொல் ஆடவில்லை.

இருவரும் தம் மக்களை மட்டும் அனுப்பி வைப்பது என்ற முடிவுக்கு வந்தனர். தம்மோடு வந்த கூட்டத்தில் மறை கற்றவன் அந்தண வகுப்பினன்; நம்பிக்கைக்கு உரியவன்; அவனிடம் மக்களை ஒப்புவித்தனர்.

பெற்றவர்கள் பேசும் உரைகேட்டு மற்று அச்சிறுவர்கள் மனம் கலங்கினர். பிரிதற்கு வருந்தினர்.