பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

75




“எம்மை விட்டு நீங்கள் பிரிகின்றீரோ” என்று கேட்டனர். தந்தையின் முகத்தைப் பார்த்தனர். தாயின் குளிர் முகத்தைப் பார்த்தனர். அவர்கள் விழிகளில் கண்ணீர் ஆறாகப் பெருகியது; அழுதனர்.

பிள்ளைகளை அவன் கொண்டு செல்லவில்லை. இவர்கள் உயிர்கள் இரண்டனையும் பறித்துக் கொண்டு செல்வது போல் அவர்களுக்கு இருந்தது. பாசக் கயிறு கொண்டு வந்து எமன் அவர்கள் பாசக் கயிற்றை அறுத்துச் செல்வது போல் இருந்தது. அந்த அந்தணனை அவர்கள் வெறுப்போடு பார்த்தனர். அவன் விருப்போடு அவர்களை அழைத்துச் சென்று வீமன் திருநகரை அடைந்தான். ஒப்புவித்த கடமையைத் தப்பு ஏதும் இல்லாமல் செய்து முடித்தான். பெட்டகத்தில் வைக்கும் நிதிபோல் அவர்கள் பாதுகாப்பான இடத்தை அடைந்தனர்.

சுமை பாதி நீங்கியது. இனி அவர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாயினர். நாட்டு மக்களும் அவரவர் தம் வீட்டை அடைந்தனர். வழி விடவும் அஞ்சினர். பற்றற்ற துறவிகளாக அந்தப் பாசமுள்ள குடிமக்கள் அவனை விட்டு நீங்கினர்; ஞானியர் ஆயினர்.

வழிப் பாதையை அவர்கள் விழிகள் நோக்கின. எங்கும் கள்ளிச் செடிகள்; நெகிழ்ந்து செல்லும் அரவுகளும் இருந்தன. அவை தெறித்த மாணிக்கங்கள் சிவப்புக் கற்கள் என ஒளி வீசின. சருகுகள் எரிந்து சாம்பல் எங்கும் தெரிந்தது.

அந்தப் பொட்டல் காட்டில் பொன் நிறத்துப் பறவை ஒன்று தெரிந்தது; பறந்து வந்து அவர்கள் முன் இருந்தது. கலியன்தான் அந்தப் பறவையாக வந்தான் என்பதை அவர்கள் அறியவில்லை. மாயையால் தோற்றுவித்த தோற்றம் அவர்களை மயக்கியது.