பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

91



தனியாக விட்டுச் சென்றான் அன்னவனைத் தேடி அலைகின்றேன்” என்றாள்.

இவன் கேட்ட வினாக்கள் அத்துணைக்கும் விடை இது ஆகும். பெருவழியில் அவர்கள் சேதி நன்னாட்டை அடைந்தனர்.

அதற்குமேல் அவன் துணை அவளுக்குத் தேவைப்படவில்லை; சுமையை இறக்கி வைத்துவிட்டு அவன்தான் ஏந்தி வந்த வணிகச் சுமையோடு சென்றான். வழித்துணைக்கு விழியழகி அவனுக்கு; அவளுக்கு அந்த வணிகப் பெருமகன். அவன் பலமூட்டைகளை வழியில் அவிழ்த்துவிட்டான். வணிக அனுபவங்கள் அவள் கேட்க விருப்பம் இல்லை; என்றாலும் அவனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவன் தன் குலப் பெருமையைப் பேசி அவளுக்கு அவன் தன் சாதனைகளைக் கூறி வந்தான். இதைப்போல் பலருக்கு அவன் உதவி செய்ததையும் எடுத்துக் கூறினான். ஒரு நாளும் தனி வழியே போக வேண்டா, யாராவது கூட்டுச் சேர்த்துக் கொண்டால்தான் வெற்றி என்று பேசினான். ‘போகும்போது நாம் என்ன எடுத்துக் கொண்டு போகப் போகிறோம்’ என்று தத்துவம் பேசிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றான். அனுபவம் அதை அவள் போகும்போது எடுத்துச் சென்றாள்.

நாற் சந்தியில் அவள் விடப்பட்டாள். இவள் ஒரு விசித்திரமான பெண்ணாக விளங்கினாள். புடவை அறு பட்ட நிலை; முற்றுப்புள்ளி வைக்காமல் நீண்ட தொடர் வாக்கியமாக விளங்கிய கண்ணீர்; அது எப்பொழுது நிற்கும் என்று தெரியாத நிலை; துயர் அவளைக் கவ்வி இருந்தது. பார்த்தாலே பரிதாபத்துக்குரியவள் என்ற முத்திரை குத்தப் பட்டவளாய் இருந்தாள்.

பார்த்தவர் கேட்டவர் கிசுகிசுத்துப் பேசியவர் இப்படி அங்கங்கே கூடிப் பேசினார்கள் விசாரித்தவர் சிலர்.