பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

புகழேந்தி நளன் கதை



ஊரவரை விசாரித்தான்; யாராவது புதியவர் அங்கு வந்து வதிகின்றாரா என்று விசாரித்தான்.

“நேரே அரசியின் அந்தப்புரம் செல்க! அங்கு நீ சொல்லும் ஒரு புதுப்பெண் தங்கி இருக்கிறாள். கட்டியவன் நடுக்காட்டில் விட்டுச் சென்றான் என்ற கட்டுரை கூறியவள் அவள்; அங்குச் செல்க” என்று சொல்லி அனுப்பினர்.

மாளிகை சென்றான். மாவிந்த நகர் தலைவன் நளன் அவனை மணந்தவள்; தணந்தவள்; அங்கு இருந்ததைக் கண்டான். வீமன் மகள்; கொடிபோல் இருந்த கோமகள் அவளைக் கண்டான் “மகளே!; என்று கதறினான். அவன் அவலத்தை அவன்விட்ட கண்ணீரில் காட்டினான். அவள் ஒடோடி வந்தாள். நாடி அவன் காலடிகளில் விழுந்து வணங்கினாள். அவன் கால்களைத் தன் கண்ணீர்த் துளிகளால் கழுவினாள். குமுறிக் குமுறி அழுதாள்; அவனைத் தொழுது வணங்கினாள்.

அவர்கள் மேலும் பேசி அறிவதற்கு முன் பேரரசி அங்கு வந்து சேர்ந்தாள். இந்தப் புதுமையைக் கண்டாள்.

அந்தணன் அறிவித்தான்; “இவள் உன் மகள்” என்றான்.

அது அவளை வியப்பில் ஆழ்த்தியது. அவள் தன் தங்கை மகள் என்பதை அறிந்தாள். உருக்குலைந்த நிலையில் அவளால் அறிந்து கொள்ளமுடியாத நிலையில் இருந்தாள்.

மணத்தில் அவளைச் சந்தித்தது. அன்று அவள் மின்னல் கொடியாக இருந்தாள். இன்று பின்னக் கணக்காக மாறிவிட்டாள். தாய்மை அடைந்தவள்; காயாக இருந்தவள் இப்பொழுது கனியாக மாறினாள். அதனால் அடையாளம் காணமுடியாமல் போய்விட்டது.