பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

புகழேந்தி நளன் கதை



விதர்ப்பன் நகர் ஆகிய குண்டினபுரத்தைத் தமயந்தி சென்று அடைந்தாள். ஊரவர் திரண்டனர். வழியில் நின்று சந்தித்தவர், அவளை நினைத்து அழுது தெருவைக் கண்ணீர் வெள்ளத்தில் நனைத்தனர். “மகளே உனக்கா இந்த கதி வரவேண்டும்” என்று தேவையற்ற கேள்வியைக் கேட்டனர்.

தந்தை மகளைத் தழுவிக் கொண்டான். உணர்ச்சிப் பெருக்கால் அவர்கள் உரை தவிர்த்தனர். விட்டுவிட்டு அவள் கண்ணீர் சொட்டு சொட்டாக விட்டாள்.

தாய் அவளைப் பார்த்தாள்; மகள் தன்னுடன் இருப்பதை மறந்தாள். அவள் பாழ் மண்டபத்தில் தனி யாளாக விடப்பட்ட நிலையில் அவள் பட்ட வேதனையை எண்ணிப் பார்த்தாள். அந்த நினைவு அவளால் தாங்க முடியவில்லை; “ஒ” என்று கதறி அழுதாள்.

“பனி இருளில் பாழ் மண்டபத்தில் உன்னைப் பற்றி நினைக்காமல் உன்னைவிட்டு அகன்றபோது தனியே நின்று நீ என்ன நினைத்தாய்? என்ன செய்தாய்?” என்று தனிமைப்பட்டுப் புலம்பினாள். அந்த அவலக் காட்சி அவளை அலைத்தது.


3
கலி நீங்கு காண்டம்

வீமன் திருநகரில் மக்களோடு தமயந்தியும் போய்ச் சேர்ந்தாள். மனைவி மக்களைப் பிரிந்த மன்னன் நளன் நாடோடியாகத் திரிந்தான்.