பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்0114

என்னுடைய
ஏக்க வரிகள்
ஆலிவ்
மரங்களின் இடையே
ஒரு-
சோகத் தென்றலாக
வீசட்டும்

மெஜிபாஸுக்கு எழுதப்பட்ட இக்கல்லறை வரிகள் (epitaph) இளமையில் பரிதாபமாகக் கொலை செய்யப்பட்ட லார்காவுக்கும் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.

லார்காவை நேரில் பார்த்துப் பேசிப் பழகிய சமகாலக்கவிஞர்களும், கலைஞர்களும் அவனை வியந்து கூறிய பாராட்டுரைகள் செவிக்கும் சிந்தைக்கும் தேன்விருந்துகளாக இனிக்கின்றன.

“லார்கா பேசும்போதும், தனது கவிதையை உணர்ச்சியோடு படித்துக் காட்டும் போதும் தன் நாடகத்திலிருந்து ஒரு காட்சியை நடித்துக் காட்டும் போதும், அல்லது இசைப் பெட்டியின் முன்னமர்ந்து பாடும்போதும் அவனைச்சுற்றி ஒரு காந்தமண்டலம் தோன்றி ரசிகர்க்ளை வசியப்படுத்தி மந்திரத்தால் பிணிக்கும்!” என்று ரஃபேல் ஆல்பெர்ட் என்ற கவிஞன் குறிப்பிடுகிறான்.

லார்காவைவிட ஏழு ஆண்டுகள் மூத்த கவிஞனான பெட்ரோ நூலினாஸ் “அவன் எங்களை முன்னின்று நடத்திச் சென்ற பேரானந்தப் பெருவிருந்து: அவனைப்பின்தொடர்ந்து செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,” என்று உளந்திறந்து பாராட்டுகிறான்.

லார்காவின் நெருங்கிய நண்பரும் கவிஞருமான வின்சென்ட் அலெக்சாந்தர் என்பவர், ஒருமுறை தாம் கண்ட லார்கா தரிசனம் பற்றிக் குறிப்பிடும்போது, “அமைதியான ஓர் இரவில் அழகான மேல்மாடியில், நிலவின் அமுத கிரணம் தன் முகத்தில் விழ, லார்கா நின்றுகொண்டிருந்தான். அவன் கைகள் வானத்தை நோக்கி உயர்ந்திருந்தன. ஆனால் அவன் பாதங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து காலத்தைவென்று, ஸ்பானிய மண்ணில் வேரூன்றி இருந்தன” என்று மெய்மறந்து கூறுகிறார்.

“இதயத்தில் ஈட்டியைப்போல் பாயக்கூடிய கவிதையை இன்னும் நான் எழுதவில்லை” என்று ஒருமுறை லார்கா தன் நண்பனான கில்லன் என்பவனிடம் கூறினானாம். ஆனால் அக்கூற்று பொய்யானது. அவன் பாடிய கவிதைகளில் பல படிப்பவரின் இதயத்தைத் துளைத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவை. வார்கா படிக்கப்பட வேண்டியவன் அல்லன்; காதலிக்கப்பட வேண்டியவன்.