பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிதை ஆவேசம் பெறுவதற்காகச் சில கவிஞர்கள் மதுவையும் மற்ற போதைப் பொருள்களையும் நாடுவதுண்டு. பிரெஞ்சுக் கவிஞர் போதலேர்,

கஞ்சாப் போதையின் துவக்கத்தில் வழக்கத்திற்கு மாறான வண்ணத்தின் ஆதிக்கம் நமக்குப் புலப்படும், கண்ணைப் பறிக்கும் ஒளியுடம்போடு காட்சி தரும் மோகினிப் பெண்கள், நீலவானைவிடத் தெளிவான ஆழமான விழிகளால் நம்மை உற்றுப் பார்ப்பார்கள். அப்போது ஏற்படும். இனம்புரியாத க்ஷன நேர மன நிலைகளில் நம் வாழ்க்கையின் ஆழ அகலங்களும், தெளிவு சுழிவுகளும், அற்புதங்களும் நம் கண் முன் பளிச்சிடும். நம் கண்ணுக்கு முதன்முதலில் எந்தப் பொருள் தென்படுகிறதோ, அதுவே நம் அறிவை நடத்திச் செல்லும் குறியீடாக அமையும். தெளிந்த நீர் நிலைகளும், நிலைக் கண்ணாடிகளும், கனவுலகத்தை நமக்குத் திறந்து விடும்; சோகமயமான ஒரு பேரின் பத்தில் நம் உள்ளம் ஆழ்ந்து, எல்லையற்ற காட்சிகளில் திளைக்கும்”

என்று குறிப்பிடுகிறார்.

உள்ளம் தீவிரமாக உணர்ச்சிவசப்படும் போது, கவிதை தானாக ஊற்றெடுத்துக் கரைபுரண்டு வருவதாக ஆங்கிலக் கவிஞர் வோர்ட்ஸ் வொர்த் குறிப்பிடுகிறார். இக்கருத்தை ஒத்துக் கொண்டது போல், பிரெஞ்சுக் கவிஞர் ரெம்போவும் கவிதைத் தோற்றம் பற்றிக் கீழ்க்கண்ட கருத்தை வெளியிடுகிறார்:

கவிஞனுக்குக் கட்டுப்பாடு கூடாது. கவிதை கவிஞனுள்ளத்தில் தானாகக் கருக்கொண்டு, கற்பனை வடிவம் பெற்றுப் பக்குவமடைந்து பொங்கி வரவேண்டும். கவிஞன் தனது உள்ளத்தில் கருத்துக்கள் மலர்ந்து வருதலைக் கண்டு சுவைத்து அதை அப்படியே அனுமதிக்க வேண்டும்.”

பொதுவாக, ரெம்போவுக்குப்பின் தோன்றிய புறமெய்ம்மையியலார் எல்லாரும் கவிதை பற்றிய இக் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றனர். புதிதாக அடிமனக் கோட்பாடு இவர்கள் கருத்துக்களோடு சேர்கின்றது.

பொதுவுடைமைக் கொள்கையாளனும், முன்னோக்கிய வாதியுமான மாயகோவ்ஸ்கி, கவிதைத் தோற்றம் பற்றிச் சுவையான கருத்தொன்றைக் கீழ்க்கண்டவாறு வெளியிடுகிறார்.

நான் என் கைகளை வீசி வார்த்தைகள் ஏதுமின்றி முணுமுணுத்த வண்ணம் நடக்கிறேன்; என் முணு முணுப்புக்கு இடையூறு வராத வண்ணம் நடக்கிறேன். என் நடையில் வேகம் கூடும்போது, நான் வேகமாக முணுமுணுக்கிறேன்.