23◯முருகு சுந்தரம்
சொர்க்கமண்டலத்தில் பறந்தாலும், இவ்வுலகப் பற்றும், சிற்றின்ப இச்சையும் தம்மைப் பிணித்து முடக்கி விடுவதாக எண்ணி வருந்துகிறார்; தாம் ஆழ்ந்திருக்கும் துன்பக் கடலிலிருந்து மீட்சியே கிடையாது என்ற வருத்தம் அடிக்கடி அவரிடம் மேலோங்கி நிற்பதுண்டு.
பாரிஸ் நகரம்
மாறிக் கொண்டிருக்கிறது
என்னை அழுத்தும்
துயரச் சுமை
சிறிது கூட அசையவில்லை
என்று அவருடைய துயரப் பெருமூச்சு ஒருபாடலில் கேட்கிறது. மற்றொரு பாடலில்,
என் துயரமே
அறிவோடு நடந்துகொள்;
அமைதியாக இரு!
இரவின் கொடுமைக்கஞ்சி
நீ கதறுகிறாய்?
இரவு விழுந்துவிட்டது
இதோ—
விடியல் தலை தூக்குகிறது:
என்று ஞானிபோல் தமக்குத்தாமே ஆறுதல் கூறிக் கொள்கிறார்.
என்றாலும் அவர் வாழ்வில் மிஞ்சியது ஏமாற்றமே. அவர் எழுதியுள்ள உரைப் பாடல்களில், வாழ்வின் இறுதியில் அவர் கொண்ட சலிப்பும், ஏமாற்றமும் உருக்கமாகப் பேசப்படுகின்றன.
"சில சமயங்களில் என்னை ஒரு ஞானியென்று நான் முட்டாள்தனமாக நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு மருத்துவனுக்கு இருப்பதுபோல், அருளுள்ளம் என்னிடத்தில் அமையவேண்டும் என்று நான் அவாவுவதுண்டு; அப்பேறு எனக்குக் கிடைக்கப்போவதில்லை. இவ்வஞ்சக உலகில் என்னை நானே தொலைத்துவிட்டு, மக்கட் கூட்டத்தின் புறங்கையால் இடித்துத் தள்ளப்பட்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். என் கடந்தகால நினைவுகளின் ஆழத்தை அடிக்கடி எட்டிப் பார்த்து நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். ஏமாற்றமும், கசப்புணர்ச்சியும், துன்பமா-மீட்சியா என்று உணர முடியாத குழப்பமுமே எனக்கு மிஞ்சியவை என்று புலம்புகிறார் போதலேர்.
மேகத்தின் உச்சியில் பறப்பதற்கு உதவிய பெரிய சிறகுகளின் சுமை, பூமியில் கடற்பறவையைச் செயலற்றதாக்குவதுபோல், கற்பனைச் சொர்க்கத்தில் பறப்பதற்கு