பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என் வாழ்க்கையைக்
காஃபிக் கரண்டியால் அளந்து
சலித்துப் போனேன்.

 



டி. எஸ். எலியட்
(1888-1965)


தாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட் எழுபத்தைந்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்; நாற்பத்தைந்தாண்டுகள் தீவிர இலக்கியப் படைப்பில் ஈடுபட்டவர்; மிகச்சிறந்த ஆங்கிலக் கவிஞருள் ஒருவராக மதிக்கப்படுபவர். இருபதாம் நூற்றாண்டுப் புதுக் கவிதையுலகில் இவரைப்போல் பாதிப்பை ஏற்படுத்திய கவிஞர் வேறுயாருமில்லை. என்றாலும் இவர் படைப்புக்கள் சாதாரண மக்களைச் சென்றடையவில்லை. இவர் அறிஞர்களின் கவிஞர். இவர் படைப்புக்களில் உள்ள இருண்மையும் (Obscurity) ஆன்மரகசியப் புனைவும் (mystcism) எளிதில் எவரையும் நெருங்க விடுவதில்லை. எனவே இவரைப் பொதுவாக மேலை நாட்டு இலக்கியவாதிகள் ‘அருவக் கவிஞர்’ (the invisible poet) என்று குறிப்பிடுவது வழக்கம்.

எலியட் ஐக்கிய அமெரிக்க நாட்டில் மிஸ்ஸௌரி மாநிலத்தில், செயிண்ட். லூயிஸ் நகரில் 1888-ல் பிறந்தவர், தந்தை ஹென்றி வேர் எலியர் ஒரு தொழிலதிபர்: செங்கல் ஆலை நடத்தியவர். தாய் சார்லெட்ஸ்டெர்ன்ஸ் எழுத்தாற்றலும், கலையார்வமும் மிக்க சமூகசேவகி. தந்தை வழிப்பாட்டனார் செயிண்ட் லூயில் நகரில், இறையொருமைக் கோட்பாட்டுத் திருச் சபையையும் (unitarian church), வாஷிங்டன் பல்கலைக் கழகத்தையும் நிறுவியவர்; சமயச் சார்பான பல நூல்களை எழுதியவர். எலியட் ஓர் எழுத்தாளராகவும் சமயக் கவிஞராகவும் உருப்பெற்றதற்கு அடித்தளமாக அவருடைய பாட்டனாரும் தாயாரும் விளங்கினர். எலியட் சிறந்த வங்கி ஊழியராகவும், பதிப்பாளராகவும் விளங்கியதற்குத் தந்தையின் தொழில் திறமை அடித்தளமாக விளங்கியது.