பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்96

மிகமிகச் சிறியவன்
என்பதை உணர்கிறேன்.

ஆனால்-
யாரும் எதிர்க்க முடியாதபடி
என்னுள் ஒருவன்
உருவாகிக் கொண்டிருக்கிறான்.
என்னை விட
ஒரு பிச்சைக்காரன்
வசதியானவன்
என்பதைச் சுட்டிக்காட்டிக்
கேலி செய்கிறாய்;
ஆனால்-ஒன்றை மட்டும் உணர்த்து கொள்!
வெசுவியஸ் எரிமலை
குமுறி எழுந்த போது
செல்வம் கொழுத்த
பாம்பி[1] நகரம்
உருத் தெரியாமல்
அழிந்தது போல்
நீயும் அழியப் போகிறாய்!

[கால் செராய் அணிந்த மேகம்]

என்று சாபம் கொடுத்தான். காதற் போட்டியில் முதலாளித்துவத்துக்குப்படைக் கலன்களாக இருந்து துணைபுரிந்த மதம் கலை, இலக்கியம், சமுதாய அமைப்பு யாவற்றையும் தன் எழுத்துச் சூறாவளியால் சுழன்றடித்தான். காதற் போட்டியில் மனிதனுக்கு மனிதன் சமநிலையிலிருந்து போட்டியிட வேண்டும் என்பது அவனுடைய காதற் கொள்கை.

மாயகோவ்ஸ்கியின் கடைசி காதலி ‘வெரோனிகா போலன்ஸ் கயா’ என்ற மாஸ்கோ நடிகை. அவளும் திருமணமானவள். அவளுடைய கணவன் மிகெய்ல்யான் ஷின் ஒரு நடிகர்; நாடக இயக்குநர், மாயகோவ்ஸ்கி வெரோனிகா கள்ளக் காதல் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள் மாய கோவ்ஸ்கி வெரோனிகாவை அவள் கணவனிடமிருந்து மண விலக்குப் பெற்றுக் கொண்டு தன்னோடு நிலையாகத் தங்கி விடும்படி வற்புறுத்தினான். அப்போது எழுந்த கருத்து வேறுபாட்டில் உள்ளம் உடைந்த மாயகோவ்ஸ்கி துப்பாக்கியைத் தன் இதயத்துக்கு நேராக வைத்துச் சுட்டுக் கொண்டு இறந்தான். அன்று 14- 4- 1930.

  1. ரோமப் பேரரசின் புகழ் பெற்ற நகரம். கி. மு. 79- இல் வெசுவியஸ் எரிமலை குமுறி எழுந்து இந்நகரை அழித்தது, கி. பி. 1755-இல் இதன் அழிவுகள் தோண்டி எடுக்கப்பட்டன.