பக்கம்:புகழ்மாலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

61


நமக்குக் கிடைத்த நாத்திகக் கவிஞர்

கூத்தடித்துக் கொண்டிருக்கும் புராண நூலின்
    கொட்டத்தை அடக்கிவரும் கவிஞன். நல்ல
நாத்திகன் நற்றமிழன் இந்நூற் றாண்டு,
    நம் நாட்டுக் களித்துள்ள, எழுத்துச் செல்வம்.
ஆத்திகர்க்கு வேப்பங்காய், நமக்கு மாங்காய்.
    அகத்தியர்போல் உடல்மரணம் மட்டும் உள்ளோன்.
சூத்திரனே என்பவனை உதைக்கச் செல்லும்
    சுப்புரத்தி னக்கவிஞன் எதிர்ப்பில் வாழ்வோன்.

நீச்சலடித் திடுதற்கே அச்சங் கொள்வோர்
    நீர்க்கடலி லாமுத்து எடுப்பர்? ஆட்டின்
மேய்ச்சலைப்போல் நுனிக்கல்விப் பயிற்சி பெற்றோர்
    முத்தமிழை உணர்வாரா? உணரார் ஆனால்
பேச்சுமட்டும் பிரமாதம் அவர்க்கு. இந்தப்
    பெருங்கவிஞர் அவர்க்கெதிரில் வந்து விட்டால்
காய்ச்சலொடு படுப்பவரும் உண்டு இன்னார்க்
    கவிதையினால் பிழைப்பவரும் நாட்டில் உண்டு

கல்லாதார் இவர்க்கவிதைத் தன்னைக் கேட்டால்
    கட்டாயம் இருசெவிக்கும் பசியெ டுக்கும்.
சொல்லாட்சி; சுயவிளக்கம்; புதுமை, காதற்
    சுவையோடு இவரளிக்கும் உவமை யாவும்,
எல்லார்க்கும் வந்திடுமா? கிட்டத் தட்ட
    எல்லோரும் பேர்பெறுவர். ஆனால் கீர்த்தி,
எல்லாரும் பெறுவதிலை. அந்தக் கீர்த்தி,
    இவர்போன்றக் கவிஞர்களே பெறுதல் கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/63&oldid=1489342" இலிருந்து மீள்விக்கப்பட்டது