இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64
புகழ் மாலை
கள்ளியின் வயிற்றில் தோன்றும்
கட்டையே அகிலாம். அந்தக்
கள்ளியில் தோன்று கின்ற
கட்டைபோல்; ஏழை விட்டுப்
பிள்ளையாய்ப் பிறந்து, சேதுப்
பிள்ளையை வென்ற மேதை
வெள்ளுடை உடுத்த தன்றி
வேறுடை உடுத்த தில்லை
தாழம்பூ முட்பூ; கொக்கு
சந்தேகப் படும்பூ; நெஞ்சில்
வாழும்பூ அன்பு; வானம்
வளர்க்கும்பூ நிலாப்பூ; வெள்ளைத்
தாழம்பூ வேட்டி கட்டித்
தறித்துண்டு தோளில் போட்டு
வாழிய தமிழில் பேசி
வந்தவர் அறிஞர் அண்ணா.
எள்விதை கறுத்தி ருக்கும்
என்றாலும், எள்ளின் பூவோ,
வெள்ளையாய் இருக்கும். அண்ணன்
மேனிதான் கறுப்பே யன்றி,
உள்ளமோ தூய வெள்ளை.
உடுத்திய உடையும் வெள்ளை.
அள்ளிப்போய் அழகு பார்க்கும்
அழகான முத்து வெள்ளை.