பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



13. நச்சுக்கனிகளை அகற்றுவது எப்படி?

பெண் கருக்கொலையை ஒழிக்க சமய பீடங்கள் ஒருங்கிணைந்து இயக்கம் காண விழைவதாகச் செய்தி வந்துள்ளது.

பெண்ணாகப் பிறந்தவள்’, ‘பொம்மனாட்டி என்று பெண் குறிக்கப்படுவதுபோல், ஆணாய்ப் பிறந்தவன்’ என்று ஆண் சொல்லப்படுவதில்லை. அவனை யாரும் ஆளப்படுவதற்குரியவனாகக் கருதுவதும் இல்லை.

மனித மதிப்பையும் உழைப்பு மதிப்பையும் கல்வி மதிப்பையும் அறிவாற்றலுக்குரிய மதிப்பையும் இழந்து பொன்னும் பொருளும் நுகர்பொருள்களின் குவிப்பும் இணையக்கூடிய வெறும் உயிர்க்கூடாகப் பெண் மாறி விட்டதற்கு சமயங்களே காரணம் என்றால் அதுதான் மெய்.

மேல் வருணத்தின் பிடிகளுக்குள், பட்டுத்துணிப் புழுதிக்குள் பொதிந்திருந்த வேத-தரும-சாத்திரங்கள் இந்நாட்களில் அறிவியல் தகவல் தொழில்நுட்பக் கட்ட விழ்ப்பில் எங்கே, என்ன, ஏன், எப்படி என்ற ஆராய்ச்சிக் கண்களைத் திறக்கச் செய்திருக்கின்றன. அறிவியல் தொழில்நுட்பக் கலைகளில் ஆண்களை விடப் பல மடங்குகள் தம் திறமையை மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர் பெண்கள்.

எந்த மேலாண்மைக்கும் ஆண்கள் நியாயம் காண முடியாது. என்றாலும், திருமணம் என்று வரும்போது “நீ ஒரு மனைவியாக உன் கடமையைச் செய்ய முடியாது. என் உணவு, சுகவாழ்வுத் தேவைகளைக் கவனிக்க உன் ஆற்றல் தடையாக இருக்கும்” என்று தவிர்க்கிறான். காரணம், ஆதிக்க சமயமரபுதான்.