புதிய கோணம் 17
“கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல்திசை வாயில் வறியேன் பெயர்க”
(சிலம்பு 23, 82)
என்று அத்தேவியார் கூறிக்கொண்டு கொற்றவை வாயிலில் தம் வளையல்களை உடைத்த அந்த நேரத்தில் முற்றிலும் ஆணவ மலத்தில் இருந்து விடுபட்டு விடுகிறார். வறியேன் பெயர்க’ என்று கூறும் பொழுதே அந்த ஆன்மா முழு விடுதலை பெற்றுவிட்டதைக் குறிப்பால் பெறவைக்கின்றார் ஆசிரியர். மாசு நீங்கிய பொன்னாக அப்பெருமாட்டி ஆயினார் என்பதை அவருடைய சொற்களிலிருந்தே கூட அறிய முடிகிறது. குன்றத்துக் குறவர்கள் “வள்ளி போல் வீர் ! யாவிரோ?’ என்று கேட்ட வினாவிற்கு அத்தேவியார் ஒரு சிறிதும் முனியாமல்
“மண மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து உறுத்த காலைக் கணவனை அங்கு இழந்துபோந்த கடுவினையேன் யான்’ (சிலம்பு 24, 5)
என்று கூறுகிறார். கணவன் இறப்பு, அரசன் மரணம், மதுரை அழிவு ஆகிய அனைத்துக்கும் வல்வினையே காரணம் என்று உணர்ந்து கொண்டார். இந்நிலையில் மதுரை, அரசு இரண்டும் கேடு உற என்றமையின் அக்கேட்டுக்குத் தாம் எவ்வாற்றானும் காரணம் அல்லர் என்பதையும், கணவனை இழந்ததற்கும் வல்வினை காரணம் என்றமையின் பாண்டியன்