பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்று நூலே எழுத தகவல் அறிவு பெரும் அளவுக்கு இருக்கவேண்டும். அது இந்த நூல்மூலம் தெரிகிறது. ஆனால் தகவல் அறிவு மட்டும் போதாது. பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். விருப்பு, வெறுப்பு மனச்சாய்வு, கொள்கை சார்பு இருக்கவே கூடாது. நான் இந்த வரலாற்று நூலை எழுதி இருந்தால் என்ன அறிந்தும் அறியாமலும் ஒரு பக்கமாக அழுத்தம் கொடுத்திருக்கக்கூடும். ஆனல் வல்லிக்கண்ணனோ தான் புதுக்கவிதை ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக இருந்தும் படைப்பில் தன் போக்கு என்று கொண்டிருந்தும் அந்த ‘தான்’னை ஒதுக்கிவிட்டு புதுக்கவிதை முதல் இன்றுவரை உள்ள படைப்புகளுக்கும் போக்குகளுக்கும் கொள்கைகளுக்கும் கிளை இயக்கங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் சரித்திர நியாயம் கிடைக்கச் செய்திருக்கிறார். தனக்கு உடன்பாடாக இருப்பதை அளவு கடந்து மெச்சியும் தனக்கு ஏற்காததை மறைத்தோ அலட்சியப்படுத்தியோ இகழ்ந்தும் எழுதவே இல்லை. ஒரு இலக்கிய சரித்திர ஆசிரியரால் இலக்கிய மாணவர்களுக்கு சரியாக தரப்பட்ட புதுக் கவிதை இயக்க முதல் நூல். இதை எழுதி இருப்பதுக்கு ஒரு இலக்கிய கடமையை பொறுப்புடனும் நேர்மையாகவும் மனப்பூர்வமாகவும் சரியாகவும் நிறைவேற்றி இருப்பதுக்கு நாம் வல்லிக்கண்ணனுக்கு பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். புதுக்கவிதை பற்றிய ஒரு ‘ஆதான்டிக்’ ஆதார பூர்வமான புத்தகத்தை, இந்த அஸ்திவாரத்தின் மீது புதுக்கவிதை ஆராய்ச்சி செய்ய வழி செய்யும் இந்த புத்தகத்தை, அவரே முடிவுரையாக ‘இது வரலாறு மட்டுமே, இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு புதுக்கவிதைகளையும் கவிஞர்களையும் நன்கு விமர்சிக்கும், ஆழமும் கனமும் கொண்ட ஆய்வுரைகள் வரவேண்டும்’ என்று சொல்வதுபோல, திறனாய்வுக்கு ஆதார ஆகாரம் தரும் இந்த புத்தகத்தை எழுத்துபிரசுரம் வெளியீடாக கொண்டு வருவதிலே எனக்குள் ஏற்பட்டிருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் எனக்குத் தான் தெரியும்.

27-4-77 சி. சு.செல்லப்பா

சென்னை