பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகவல் ஆதாரத்தில் முன்னே பின்னே வைத்து அநுமானித்து அந்த நூற்றாண்டு, இந்த நூற்றாண்டு என்று வரையறுத்திருக்கிறோமே தவிர இந்தப் பகுதி நூற்றாண்டு, இந்தப் பத்தாண்டுக்காலம், இந்த ஆண்டு என்று எதுவும் கணிக்க முடியாத நிலைதான். எனவே நமது இலக்கிய கால கட்டங்கள் ‘பொத்தம் பொதுவாக’வும் குத்து மதிப்பாகவும் ஒரு மிகநீண்ட கால அளவுக்குள் எல்லைக்குள் அடக்கப்பட்டு கணிக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது போகட்டும். ரொம்ப பழமையானவை என்று சொல்லிவிடலாம். சென்ற நூற்றாண்டு, இந்த நூற்றாண்டு பற்றி என்ன? இந்த காலத்தில் கூட தற்கால கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி வரலாற்று ரீதியாக புத்தகம் ஏதாவது இருக்கா என்பது எனக்கு சந்தேகமே. பாரதிக்கு முன், பாரதிக்குப்பின் என்று கூட புதுவித கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி பற்றி புத்தகங்களே இல்லையே. ஆராய்ச்சி அத்தப் பார்வையில் ஏதாவது செய்யப்பட்டிருக்கிறதா என்பதும் எனக்கு கேள்வி. கவிதை போகட்டும்; சிறுகதை, நாவல் பற்றிக்கூட அத்தகைய சரியான புத்தகம் வரவில்லை.

இந்த நிலையில் தமிழ் இலக்கியத்துக்கு சமீபத்தில் சேர்ந்த புதுக்கவிதை பற்றிய வல்லிக்கண்ணன் புத்தகத்தை ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமேலாக எழுதிவரும் வல்லிக்கண்ணன் ஏராளமாக எழுதுபவர். இலக்கிய உருவங்களில் அவர் தொடாத துறை கிடையாது போதுமான, நியாயமான அளவு வாழ்க்கை வசதிகூட எழுத்தாள வாழ்க்கை மூலம் அவருக்கு கிடைக்க வராத நிலையிலும் அவரது ஆழ்ந்த இலக்கிய ஈடுபாடும் செயலீடும் தனித்து குறிப்பிடத்தக்கது. ஒரு முனகல் இல்லாமல் வாழ்க்கைச் சவாலை ஏற்றுக்கொண்டு எழுத்தே குறிப்பாக செயல்படும் அவரை தமிழ்நாடு தக்கபடி பயன்படுத்திக் கொள்ளவில்லைதான். இருந்தும் அவரது தளராத பங்கு செலுத்தல் கணிசமானது. தன்னை விமர்சகர் என்று சொல்லிக் கொள்ளாமல் இலக்கியரசிகன் என்ற அளவிலேயே தன் அபிப்ராயங்களை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறவர் அவர். எந்த இலக்கிய புத்தகங்கள் படித்தாலும் தான்