பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘பல்கலைப் பேரறிஞர்’ - என்று படித்தவர்களால் பாராட்டப்படுகின்ற டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா M.A., M.PEd. Ph.D., D.Litt., D.Ed., FUWAI அவர்கள், உடலியல், விளையாட்டு, கதை, கவிதை, நாடகம் இலக்கிய ஆய்வுகள், ஆங்கிலம் - தமிழ் அகராதி, கலைச் சொல் அகராதி, இன்னும் பல்வேறு தலைப்புக்களில் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

இவர் எழுதிய சிறந்த நூல்களுக்காக மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். தமிழக அரசின் விருதையும் பெற்றிருக்கிறார்.

உடல் காக்கும் கலையை உலக மக்களுக்கு உணர்த்தி உற்சாகம் ஊட்டுவதற்காக, “விளையாட்டுக் களஞ்சியம்” என்னும் மாத இதழைத் தொடர்ந்து 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

மக்களுக்கு உடல் நலத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த “ஓட்டப் பந்தயம்” என்னும் முழு நீளத் திரைப்படத்தை எழுதி, இசையமைத்து, நடித்து, இயக்கி, தயாரித்து திரையிட்டுள்ளார்.

மன நலம் மற்றும் மகிழ்ச்சியை உண்டாக்கும் வண்ணம், பாடல்கள் எழுதி இசையமைத்துத் தயாரித்து இசை ஒலி நாடாக்களை - வெளியிட்டிருக்கிறார்.

இசை, நடனம் மற்றும் இசைக்கருவிகளில் பயிற்சி தருவதற்காக “சஞ்சு கல்சுரல் அகாடமி” - என்ற நிறுவனத்தை அமைத்து, அதன் தலைவராக இருந்து வழி நடத்தி வருகிறார்.

ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரியில் ஆய்வுத்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய அனுபவமானது, “திருக்குறள் புதிய உரை” எனும் இந்த நூலின் முழுமைக்கு, மேலும் செழுமை ஊட்டி இருக்கிறது.