பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 ‘மணிக்கொடி’ நின்றுபோவதை பி.எஸ். ராமையாவும் அவர் நண்பர்களும் விரும்பவில்லை. ராமையா மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு, நவயுகப் பிரசுராலயம் என்ற பெயரில் ஒரு லிமிட்டெட் ஸ்தாபனத்தை உருவாக்குவதில் வெற்றிகண்டார். அதன் வெளியீடாக ‘மணிக்கொடி’ பத்திரிகையை பிரசுரிப்பதுடன், இலக்கியம், அரசியல் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களையும் பிரசுரிப்பது என்று ஏற்பாடாயிற்று.

‘தினமணி’ ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் லிமிட்டெட் ஸ்தாபனத்தின் டைரக்டர் ஆகவும், பி.எஸ். ராமையா பிரசுராலயத்தின் நிர்வாக ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார்கள்.

‘மணிக்கொடி’ பத்திரிகை திரும்பவும் வெளிவந்தது. நல்ல கதைகளையும் மொழிபெயர்ப்புகளையும் பிரசுரித்தது. புதுமைப் பித்தன் ‘நாசகாரக் கும்பல்’ போன்ற அவருடைய அருமையான கதைகள் பலவற்றை அந்தக் காலகட்டத்தில் எழுதினார்.

நவயுகப் பிரசுராலயம் மலிவு விலையில் நல்ல புத்தகங்களையும் பிரசுரித்தது. அவை நன்கு விற்பனையாயின.

பத்திரிகை நடத்துவதற்கு ராமையா எப்போதும்போல் சிரமப்பட்டுக் கொண்டுதாணிருந்தார். அவர் எதிர்பார்த்ததுபோல, புத்தகப் பிரசுரங்களின் விற்பனைப் பணத்திலிருந்து நிதி உதவி எதுவும் பத்திரிகைக்கு ஒதுக்கப்படவில்லை. அவர் உதவி கோரிய போது, மானேஜிங் டைரக்டர் தட்டிக் கழித்து வந்தார். ஒருநாள் திடீரென்று சொக்கலிங்கம் பராமஸ்வாமி (ப.ரா) என்பவரைப் பிரசுராலயத்தில் பொறுப்பான பதவியில் நியமித்தார். அது ராமையாவுக்குப் பிடிக்கவில்லை. ப.ராவுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதன் விளைவாக, மானேஜிங் டைரக்டர் என்ற முறையில் சொக்கலிங்கம் பி.எஸ். ராமையாவை ஆசிரியர் பதவியிலிருந்து நீக்குவதாக உத்தரவு பிறப்பித்தார். அதனால் கோபமும் கசப்பும் கொண்ட ராமையா ‘மணிக்கொடி’யுடன் தனக்கிருந்த உறவை முறித்துக் கொண்டு வெளி யேறினார்.

அதன் பிறகும் ‘மணிக்கொடி’ பத்திரிகை சிறிது காலம் வெளிவந்தது. ஆயினும், ‘மணிக்கொடி எழுத்தாளர்கள்’ என்ற கவுரவத்தைப் பெற்றிருந்தவர்கள் அதில் எழுதவில்லை. புதுமைப் பித்தனும் எழுதவில்லை.

‘மணிக்கொடி’ப் பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் புதிய பரிசீலனைகளுக்கு இடங்கொடுக்கும், உற்சாகமூட்டும், வரவேற்கும்