இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தலையும் தவலையும்
199
கும்படி உச்சரிக்க முடியும். அதுவும், “மூரலிள நில வொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தினாளை” என்ற இரண்டாவதடி அவர்கள் நாக்கில் புரண்டால் ரோட்ரோலர் புரண்ட சாலை மாதிரி உச்சரிப்புச் சரியாகிவிடும்.
அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில், “முருகன் புகழை எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும்” என்று ஒரு பாட்டில் சொல்கிறார்:
- அழித்துப் பிறக்கவொட் டாஅயில்
- வேலன் கவியையன்பால்
- எழுத்துப் பிழையறக் கற்கின்றி
- லீர்! எரி மூண்டதென்ன
- விழித்துப் புகையெழப் பொங்குவெங்
- கூற்றன் விடுங்கயிற்றால்
- கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன்
- றோகவி கற்கின்றதே?
என்பது அந்தப் பாட்டு. இந்தப் பாட்டில் அவர் ஏழு ழகரங்களை வைத்திருக்கிறார். இதை முதல் பாடமாகப் படித்துவிட்டு அருணாசல புராணக் கவியை அடுத்த பாடமாகப் படித்தால் ஓரளவு எழுத்துப் பிழையின்றி ழகர ளகர லகரங்களை உச்சரிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.