பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருவன் ஆயிரம் பேர் கொண்ட ஆயிரம் படைகளை வெற்றி கொள்கிறான்; மற்றொருவன் தன்னைத்தானே அடக்கி வெல்கிறான்; இவர்களுள் தன்னை வென்றவனே வெற்றி வீரருள் முதன்மையானவன்.'

★ *

மாதந்தோறும் ஆயிரம் யாகங்களாக நூறு வருடம் யாகம் செய்பவன், தம்மைத் தாமே அடக்கிக்கொண்ட ஒருவரை ஒரு கணம் வணங்குதல் அந்த நூறு வருட வேள்வியைவிட மேலானது. '

★ *

ஒவ்வொரு மனிதனும் முதலில் தான் நன்னெறியில் நிலைபெறுதல் வேண்டும்; பிறகுதான் மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டும். இத்தகைய ஞானி கிலேசமடைவதில்லை. '

★ *

ஒருவன் தானே தனக்குத் தலைவன். வேறு யார் தலைவனாயிருக்க முடியும்? தன்னை நன்கு அடக்கி வைத்துக்கொண்டால், ஒருவன் பெறுவதற்கரிய தலைவனைப் பெற்றவனாவான். '

★ *

சகல பாவங்களையும் நீக்குதல்,

நற் கருமங்களைக் கடைப்பிடித்தல்,

உள்ளத்தைச் சுத்தம் செய்தல் -

இதுதான் புத்தருடைய உபதேசம்,

★ *

கோவேறு கழுதைகளும், சிந்து நாட்டு .யர்ந்த சாதிக் குதிரைகளும், பெரிய போர்யானைகளும் பழக்கிய பின்னால் சிறந்தவையாம். ஆனால் தன்னைத்தானே அடக்கியாள்பவன் இவை அனைத்திலும் சிறந்தவன். '

★ *

ஒருவன் தனக்குத்தானே தலைவன், தனக்குத்தானே புகலிடம். ஆதலால் வணிகன் உயர்ந்த குதிரையை அடக்கிப் பழக்குவதுபோல, உன்னை நீயே அடக்கிப் பழகவும். '


ப. ராமஸ்வாமி / 17