பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. இன்னாச் சொல் மனிதர்கள் மட்டும் தங்கள் நாக்குகளைக் காத்துக் கொண்டாற்போதும், எல்லாம் நலமாக முடியும் போர் புரியும் யானை தன் துதிக்கையில் அம்பு பாயாமல் கவனித்துக் கொள்வதுபோல், நீயும் உன்னைக் காத்துக் கொள்வாயாக!"

யுத்தத்தில் யானை வில்லிலிருந்து தெறித்து வரும் அம்புகளைத் தாங்குவதுபோல, நான் பிறர் உரைக்கும் நிந்தை மொழிகளைத் தாங்கிக் கொள்வேன். ஏனெனில் பெரும்பாலான ஜனங்கள் பண்பற்றவர் களாகவே இருக்கின்றனர். '

பழகிய யானையையே போருக்கு அழைத்துச் செல்வர் பழகிய யானை மீதே அரசர் அமர்ந்து செல்வர். மக்களிலும் நல்வழியிலே பழகியவனே, நிந்தை மொழிகளைப் பொறுத்துக் கொள்வோனே சிறந்தவன். '

பேச்சில் ஒழுக்கக்குறைவான நான்கு பழக்கங்கள் எவை? ஒரு மனிதன் பொய்யனாயிருக்கிறான்... தன்னையோ, மற்றவர்களையோ காத்துக் கொள்வதற்காகவோ, வேறு ஏதேனும் அற்ப லாபத்திற்காகவோ, அவன் வேண்டுமென்றே பொய்களைக் கூறுகிறான். அல்லது. அவன் புறங்கூறுவோனாயிருக்கிறான். அவன் கேள்விப்படுகிற விஷயங்களை ஓரிடத்திலிருந்து வேறிடத்திலே பரப்புகிறான். அதன்மூலம் (மக்களிடையே) பிளவை உண்டாக்குகிறான். நட்பு முறைகளை அவன் தகர்க்கிறான். சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக, அவன் சண்டைகளை மூட்டிவிட்டு, அவைகளி ல் ஆனந்தமடைகிறான். அல்லது, அவன் கடுஞ் சொற்களைப் பேசுவான், முரட்டுத் தன்மையும், வெறுப்பும், கொடுமையுமுள்ள பேச்சைப் பேசுவான். அவனுடைய சொற்கள் நிந்தனையாகவும் உள்ளன. அல்லது, அவன் பயனற்ற பேச்சுப் பேசும் சோம்பேறியாக இருக்கிறான்; அடக்கமோ, ஒழுக்கமோ அவனிடம் இல்லை. அவனுடைய பேச்சு மதிப்பற்றது. சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமற்றது. யாதொரு பயனுமற்றது. " 42 | புத்தரின் போதனைகள்