பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

முடையவர்கள்' தம்மைத் தாம் அறியாமல் இறப்பதால் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஒப்பானவர்கள் என்கிறது ஈசா வாஸ்யோபநிசத்து. இஃதிருந்தும் இந்த விக்கிர ஆராதனை நிலைக்கு மக்களை இழுத்து வந்து தம்மைத் தாமறிந்தொழுகும் ஆத்மிக நிலையை மறைத்துமறக்கவைத்துத் தற்கொலை செய்து வைப்பதற்கு வழிவகுத்தவர்கள் அத்வைத, துவைத, விசிஸ்டாத்துவைத ஆச்சாரியர்கள் அன்றெனில் வேரெவர்?

கழிந்த அண்மைய ஆண்டொன்றில் ஞான, பீட பரிசு பெற்ற வி. ச. காண்டேகரின் யயாதி 'நாவலில், பிரகஸ்பதியின் மகன் கஜன் வாயிலிருந்து யயாதியின் காதில் பாய்கிற மந்திரம் இது. 'ஆத்மா வா அதி மந்தவ்ய: ச்ரோதவ்ய: ஆத்மா வா அதி நிதித்யாச தவ்யா.' இதன் பொருள்; அடே மனிதனே ஆத்மாவின் அழைப்பைக் கேள். ஆத்மத்தியானமே மேலானதென்று அறிந்து கொள்; அதையே பிரம்மமென்று நம்பு' - என்பதாம். உண்மை இதுவே அன்றோ?

உலகாயதம், வைசேடிகம், நையாயிகம், சாங்கியம், மீமாஞ்சை, வேதாந்தம் எனும் தரிசனங்கள் ஆறு என்று அறிகிறேன். மற்ற ஐந்து தரிசனங்களையும் வாதப் போரில் வென்று வெற்றி பெற்றது வேதாந்தம் - உபநிசத்து. இவ்வாறிருந்தும் இவ்வருமையான - ஒப்புவமையில்லாத உபநிசத்துக் கோட்பாட்டை விலங்கிட்டுச் சிறையிலடைத்து விட்டு, வேதாந்த மதம் அல்லது வைதிகமதம் என்ற சொல்லை ‘இந்து மதம்' எனப் பெயரிட்டு மதம் எனும் சொல்லுக் கடிப்படையான கொள்கை கோட்பாடுகள் இன்னதெனக் கூறாது நாளும் பொழுதும் கும்பிடுவதொன்றே போதுமெனத் தேவாரத் திருவாசகத் திவ்யப் பிரபந்தங்களை பட்டாசுக் கட்டு வரிசைகளைப் போல் அடுக்கி வைத்துப் படித்துப் பாடிப் பசனை செய்வித்துச் சைவ - வைணவப் பக்த கோடிகளென மக்களைத் தட்டிக் கொடுப்பது நேர்மையா? நீதியா? 'அயம் ஆத்மா பிரம்மம்' என்ற அதர்வ வேத மகா வாக்கியத்துக்கும் பொருத்தமானது தானா? என்று கேட்கத் தூண்டுகிறது.