பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61



"புத்தியே யற்ற வாழ்வாய்ப்
புறவுவாழ் வுற்ற' தென்று
கத்தியே கால மெல்லாம்
காதினோத் துளைக்கும் காக்கைச்
சித்தியே சுதந்தி ரத்தைச்
சீவனாய் வைத்துக் காக்கும்
சத்தியா மெனச்சா ரங்கம்
சங்கீதம் பயின்ற தங்கே!

கொறியாடு குனிந்து குள்ளக்
கோரையும் அறுகும் மேய ,
வெறியோடு விலகி வேறாய்
வெள்ளாடு வேலி மேல்கால்
நெறியோடு வைத்து நின்ற
நிலையிலே தளிராய்த் தின்று
மறியோடு மகிழ்ந்து போதல்
மறக்கவே இயலாக் காட்சி!

காடெனத் திரிந்து நாளும்
காலாற மேய்ந்து வாழும்
ஆடெனப் பேரொன் றாயும் ,
அவற்றிடைப் பிறப்பு பேதம்
நீடினும், நேசம் நீங்கா
நெறிமுறை நிலையை யெண்ணிப்
பாடினும் படிப்பா மென்றே
பரவசப் பட்டேன், பார்த்தே!

ஏடுபெட் டிக்குள் ளேறின் ,
இருளித யத்தி லேறும்;
பாடுபெட் டிக்குள் ளேறின்,
பசிவயிற் றில்பாய்ந் தேறும்;
நாடுபெட் டிக்குள் ளேறின்,
நலிவேறு மெனற்குச் சான்றாம்
வேடபட் டியைவிட் டேறி
விரைந்ததன் றருமை வண்டி!