30
புராண-மதங்கள்
பட்டிக் காடுகளிலே, கலியாணத் தகறாரு கிளம்பிவிட்டால், பெண்ணைக் கொண்டுவா என்று ஒரு கூட்டம் கூவ, பெண்ணைக் கொண்டு போகாதே என்று மற்றொரு கூட்டம் கூவ, இரண்டு கூட்டத்தின் சச்சரவிலே சிக்கிய பெண், புலம்புவது உண்டு. என் நிலை அது போலாகிவிட்டது. ஆனால் நான் புலம்பலாமா? நானோ சாமி! என்னை இந்தக் கொடுமைக்கு ஆளாக்கினவர்களோ என்னை பூஜிக்கும் பக்தர்கள்! என்ன செய்வது நான்!
"கோயிலிலே கொண்டுபோய் ஸ்வாமியைச் சேர்ப்பதுதான் நியாயம்" என்று கருப்ப பக்தர் குழாம் கூறியபடி இருந்தது. பிச்சை பக்தர் குழாமோ, "விவகாரத்தைத் தீர்த்துவிட்டு, சாமியைத் தொடு— விவகாரம் பைசல் ஆகாததற்கு முன்னே, தொட்டா, விடமாட்டோம்" என்று கூறுகிறது.
அட பாவிகளா! உங்களுக்குள்ளே, ஏதாவது விவகாரம் இருந்தா என்னை ஏன் அதுக்காக சீரழிவு செய்கிறிங்க. நான் கோயிலுக்குப் போன பிறகு, உங்கவிவகாரத்தைப் பேசி, பைசல் செய்து கொள்ளக்கூடாதா? என்னை இப்படி அவமானப் படுத்துவது முறையா—என்று கேட்க விருப்பம்தான் — எப்படி கேட்க முடியும்!
ஊரிலே இதற்குள்ளே பேசப்பட்ட பேச்சோ, கேட்டுச் சகிக்க முடியல்லே.
"சாமி புறப்படலே இன்னும்?"
"இல்லே—சாமியை விடமாட்டேன்னு சொல்லுறாங்களாம்."
"ஏனாம்—யாராம்—"
"அவுங்கதான் பிச்சய்யா"
"ஏனாம்"