அண்ணாதுரை
73
வேடிக்கை பேசிவிட்டு, எதற்கும் விளக்கம்பெற முயற்சிக்காமலேயே இருந்துவிட்டோம்.
மற்றவர்கள் இதுபோல் இல்லை-நல்ல வேளையாக இல்லை.... அவர்களும் நம்மைப் போன்றே இருந்து விட்டால், உலகின் நிலை எப்படி இருந்திருக்கும்!!
நோய்க்குக் காரணம், தடுப்பு முறைகள், போக்கும் வகைகள், பரவவிடாதிருக்கும் வழிகள், இவைகளைப் பற்றிய ஆராய்ச்சியிலே கவனம் செலுத்தினர்—செலுத்துகின்றனர்.
மழை பொழியவில்லை என்றால், கொடும்பாவிகட்டி இழுப்போமா, கோபால பஜனை செய்வோமா, என்றுதான் புத்தி போகிறது. இது வெறும் ஏமாளிப் புத்தி. இதிலேயே, எத்தரின் புத்தியும் வேலை செய்ய ஆரம்பித்தால், மழை பெய்வதற்கு வருண ஜெபம் செய்வது என்று ஆரம்பிக்கிறார்கள். இப்படிப்பட்ட விதமாகத்தான் நம்மவர்களின் சிந்தனை சென்றுகொண் டிருக்கிறதே யொழிய, மேனாட்டு விஞ்ஞானிகள் போலவா, மழை இயற்கை நிகழ்ச்சிதான் என்றாலும், அதையே ஏதேனும் செயற்கை முறையால் நாம் உண்டாக்க முடியாதா, என்றா செல்கிறது! அவர்களின் சிந்தனை அந்தத் துறையிலேயும் சென்று, இப்போது மழையை உண்டாக்கும் முறையையும் விஞ்ஞான ரீதியாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள்—இனி இத் துறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்திய வண்ணம் உள்ளனர்.
இங்கு?
"வான மழை போலே
மேனி வண்ணம் கொண்டான்"
என்று பாடிக்கொண்டே காலந் தள்ளுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஒரு ஊரில் மழை இல்லாமல் போகவே, அவ்வூர் புத்திசாலிகள், சூரியன்மீது கல்லை விட்டெறிந்தார்கள், மழை வேண்டும் என்று.