414
புறநானூறு - மூலமும் உரையும்
பற்றியும் இவராற் பாடப்பட்ட செய்திகள், அக் காலத்தைய பல வரலாற்றுச் செய்திகளை நமக்குக் காட்டுவனவாகும்.
கழாஅத் தலையார் 62, 65, 270, 288, 289, 368
கழாஅத்தலை என்னும் ஊரினர் இவர் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும், போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தனர். அதனைக் குறித்து இவர் பாடிய செய்யுள் அக்கால வேந்தரது மறப்பண்பை விளக்குவதாகும் (புறம் 62). சேரமான் பெருஞ்சேரலாதன்,சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண் பட்டனன்; அதனால் நாணி வடக்கிருந்து உயிர் நீத்தனன் அவன் வடக்கிருந்த நிலையை இவர் பாடுவாராக, "மறத்தகை மன்னன் வாள்வடக் கிருந்தனன், ஈங்கு நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே (புறம்65) என்று கூறி இரங்குகின்றார். போர் முரசம் செய்யும் மரபினை 288 ஆவது புறப்பாட்டு விளக்குகின்றது. போர்க்களத்திலே விளங்கிய அழிபாட்டு அவலத்தை இவரது 368 ஆவது செய்யுள் எடுத்துக் காட்டுகின்றது.
கழைதின் யானையார் 204
இவர் வல்வில் ஓரியைப் பாடியவர்: “மூங்கிலைத் தின்னும் யானையைக் குறித்து, நயமாக உவமித்துப் பாடிய சிறப்பால் இப் பெயரைப் பெற்றனர் போலும், 'ஈயென இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று’ எனக் கொடைக்கண்ணும் ஒரு சீரிய நெறியைக் கண்டு கூறியவர் இவர் ஆவர். கள்ளில் ஆத்திரையனார் 175, 389
தொண்டை நாட்டுக் கள்ளில் என்னும் ஊரினர் இவர். 'ஆதிரை ஒரையிற் பிறந்தவர் போலும்! அதனால் இப்பெயர் பெற்றனர் எனலாம். வேங்கட கிழவோனாகிய ஆதனுங்கனை இவர் போற்றிப் பாடியுள்ளனர். மோரியர் தம் தேர் செல்லும் பொருட்டாக மலைகளிடையே அமைத்த பாதை பற்றிய செய்தியை (புறம் 175) இவர் கூறுகின்றனர். கள்ளிற் கேளிர் ஆர்த்திய உள்ளுர் பானை தந்த பஞ்சியங் குறுங்காய் ஓங்கிரும் பெண்ணை நூங்கொடு பெயரும் ஆதியருமனின் மூதூரைப் பற்றியும் இவர் குறிப்பிடுகின்றார் (குறு. 293). கள்ளிற் கேளிர்’ என்னும் சொன்னயத்தால், கள்ளில் என்னும் அடைமொழியைப் பெற்றனர் இவர் எனலும் பொருந்தும்.