பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

புறநானூறு - மூலமும் உரையும்



(பாண்டியனை வெங்கதிர்ச் செல்வனோடு உவமித்துக் கூறுதலால் பூவைநிலை ஆயிற்று)

ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை, மாற்றருங் கணிச்சி, மணிமிடற்றோனும், கடல் வளர் புரிவளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக்கொடியோனும் மண்ணுறு திருமணி புரையும் மேனி, 5

விண்ணுயர் புட்கொடி விறல்வெய்யோனும், மணி மயில் உயரிய மாறா வென்றிப், பிணிமுக ஊர்தி, ஒண்செய்யோனும் - என ஞாலம் காக்கும் கால முன்பின், தோலா நல்இசை, நால்வர் உள்ளும், - 10

கூற்றுஒத் தீயே, மாற்றருஞ் சீற்றம், வலிஒத் தீயே, வாலியோனைப் புகழ்ஒத் தீயே, இகழுநர் அடுநனை, முருகுஒத் தீயே, முன்னியது முடித்தலின், ஆங்கு ஆங்கு அவரவர் ஒத்தலின், யாங்கும் 15 அரியவும் உளவோ, நினக்கே? அதனால், இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைகலத்து ஏந்தி, நாளும் - ஒண்தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, 20

ஆங்கினிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத் தண்கதிர்மதியம் போலவும், நின்று நிலைஇயர் உலகமோடு, உடனே. 25

வெற்றியால் உயர்ந்த வாளையுடைய மாறனே! சினத்தால் கூற்றத்தையும், வலியால் பலராமனையும், புகழால் பகைவரை அழித்த மாயோனையும், எண்ணியது முடித்தலால் முருக வேளையும் நீ ஒப்பவனாவாய்! நினக்கு அரியனவும் உளவோ? அதனால், இரவலர்க்குப் பெறுதற்கரிய அணிகலன்களை வழங்குகின்றாய். யவனர், கலன் ஏற்றிக் கொண்டுதந்த மதுவைப், பொற்கலனில் நாடோறும் இளமகளிர் வார்த்து ஊட்ட, உண்டு மகிழ்கின்றாய். வானத்து இருள்நீக்கும் வெங்கதிர் ஞாயிற்றைப் போலவும், மேல் திசையிலே விளங்கும் பிறை போலவும், உலகம் உள்ளளவும் நிலைபெற்று, நீயும், பகைவர்க்கு வெம்மையும், இரவலர்க்குத் தண்மையும் உடையவனாக வாழ்வாயாக!