பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

புறநானூற்றுச் சிறு கதைகள்


“இவன் சிறுமைக்குச் சரியான சூடு கொடுக்கவில்லை யானால் என் பெயர் பெருஞ்சித்திரனார் இல்லை” என்று திரும்பிச் செல்லும்போது கடுமையான சங்கல்பம் ஒன்றைச் செய்து கொண்டது அவர் மனம்.

நாட்கள் கழிந்தன. பெருஞ்சித்திரனார் தன் தம்பி இளவெளிமானால் அவமானப்படுத்தப்பட்டு ஊர் திரும்பிய விவரம் வெளிமானுக்குத் தெரியாத,"புலவரை நன்றாக உபசரித்து வேண்டிய உதவிகளைச் செய்து அனுப்பிவிட்டேன் அண்ணா!” என்று தன் தமையனிடம் பொய் கூறிவிட்டான் இளவெளிமான். வெளிமானும் அதையே மெய்யாக நம்பிவிட்டதனால்தான் அவனுக்கு உண்மை விவரம் தெரியக் காரணம் இல்லாமலே போய்விட்டது.

திடீரென்று ஒருநாள் காலை வெளிமானின் கோட்டை எல்லையிலே இருந்த காவல் மரத்தைக் காக்கும் வீரர்கள் பதறியடித்துக் கொண்டு அரசனைக் காண அரண்மனைக்கு ஓடி வந்தனர். அவர்கள் வந்த வேகத்தைக் கண்ட அரசன் என்னவோ, ஏதோ என்று நினைத்துப் பரபரப்படைந்து விவரத்தை விசாரித்தான் வெளிமான்.

“அரசே! நம்முடைய காவல் மரத்திற்கு ஆபத்து! யாரோ ஒரு புலவர் நாங்கள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் ஒரு பெரிய யானையைக் கொண்டுவந்து நம்முடைய காவல் மரத்திலே கட்டிவிட்டார்.கொம்புகளை ஆட்டிமரத்தை அசைத்து இழுத்து அட்டகாசம் புரிகிறது அந்த யானை. யாரும் கிட்ட நெருங்க முடியவில்லை. அந்த யானையினது கம்பீரமான பயங்கரத் தோற்றத்தைக் கண்ட கைகால்கள் நடுக்கமெடுக்கின்றன. அதன் முதுகிலே பல பெரிய மூட்டைகள் கட்டியிருக்கின்றன. அந்த யானையை இப்படியே இன்னும் சிறிது நேரம் விட்டுவிட்டால் நம்முடைய காவல் மரத்தை ஆணிவேரோடு பிடுங்கி எறிந்து விடும். இதெல்லாம் அந்தப் புலவர் செய்கிற வேலை அரசே! யானையைக் கொன்று அவரைச் சரியானபடி தண்டிக்க வேண்டும்” என்று காவலர்கள் பதறிக் கூறினார்கள்.