பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

புறநானூற்றுச் சிறு கதைகள்


“நல்ல உலகம் நல்ல விதி”

“விதியும் உலகமும் எக்கேடு கெட்டு வேண்டுமானாலும் போகட்டும்! நீ உறங்குவதற்கு வா, உள்ளே போய்ப்படுத்துக் கொள்ளலாம். கபிலர் விழித்துக் கொண்டு விட்டால், ஏன் உறங்கவில்லை? என்று நம்மைக் கடிந்து கொள்வார்.”

“உறங்கத்தானே பிறந்திருக்கிறோம்! தந்தையை நிரந்தரமாக உறங்க வைத்துவிட்டோம். வளமான வாழ்வை அளித்து வந்த பறம்பு மலையை மூவேந்தர்கள் கையில் உறங்கக் கொடுத்து விட்டோம்”

“சொல்லியும் வருந்தியும் பயன் என்ன சங்கவை? நாமும் வாழ்கிறோம் நடைப் பிணங்களாக” பெண்கள் இருவரும் கண்ணிரைத்துடைத்துக் கொண்டு உறங்கச் சென்றனர். விரைவில் தூக்கமும் ஆட்கொண்டு விட்டது.

இப்போது, உறங்கிவிட்டதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த கபிலர் மெல்ல எழுந்தார். குடிசைக்கு வெளியே வந்தார்.

நிலா ஒளியில் அவர் தலைவைத்துப் படுத்த இடம் கண்ணிர்ப் பிரவாகத்தின் ஈரத்தால் நனைந்திருப்பது தெரிந்தது.

முழு நிலாவையும் அதன் கீழ்த்தெரிந்த வளமான பறம்பு மலையையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே நின்றார் கபிலர். கண்களில் நீர்மல்கித் திரண்டு பார்வையை மறைத்த போதுதான் அவருடைய நோக்கு தடைப்பட்டது.

“போன பெளர்ணமியில் என் உயிரினுமினிய அரசன் பாரி ஆண்ட மலை அதோ தெரிகிறது! இப்போது அந்த மலை பாரிக்குச் சொந்தமில்லை. அதைச் சொந்தம் கொண்டாடு வதற்குப் பாரியும் இந்த உலகத்தில் உயிரோடில்லை.நான் மட்டும் உயிரைச் சுமந்து வாழ்கிறேன். இதோ உறங்குகின்ற பாரியின் மக்கள் அங்கவை, சங்கவை இருவரையும் காத்துக் கணவன்மார் கையில் ஒப்படைக்கும் பொறுப்பை எண்ணி வாழ்கிறேன்.”