பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

143


சரம் சரமாகப் பூத்தால் இந்த வீடே வாய் திறந்து புன்னகை செய்கிற மாதிரி இருக்குமல்லவா?”

“கண்டவுடன் புன்னகையும் கனிந்த சொற்களும்அளித்துக் கேட்குமுன்னே கொடை கொடுக்கும் நீங்கள் அல்லவா இந்த வீட்டின் அழகு? உங்களைவிடப் பெரிய அழகும் இந்த வீட்டிற்கு வேண்டுமோ?”

“நீங்கள் புலவர். அப்படித்தான் சொல்வீர்கள். என்னை மறப்பதற்கு இடையிடையே எனக்கு ஏதாவது ஒரு பொழுது போக்கு வேண்டுமே? இந்த முல்லைக்கொடி அதற்குப் பயன்படும் என்று நினைக்கிறேன்.”

“வள்ளலே இந்த முல்லையைமட்டுமா நட்டுப்பயிர் செய்து வளர்க்கிறீர்கள்? எத்தனை எத்தனையோ பாணர், புலவர், குடிகளையும் நீங்கள்தானே நட்டுப் பயிர் செய்கிறீர்கள்?”

“புலவரே! என்னுடைய இந்தப் புன்னகை இருக்கிறதே இதற்கு ஒரு நாள் மறைவு உண்டு. இந்த முல்லை ஒவ்வொரு பருவகாலத்திலும் இந்த வீடே சிரிப்பதுபோலச் சிரிக்கப் போகிறது”

“விந்தைதான்! ஆனாலும் உங்கள் புன்னகை பெறுகிற மதிப்பை இது பெற்றுவிட முடியுமா?”

“மதிப்பு என்பதுதான் எதில் இருக்கிறது? என் புன்னகையைக் காலம் மறைக்கிறபோது நீரே ஒரு நாள் இந்த முல்லைக் கொடியின் பூவைப் பார்த்து ஏங்க நேரலாம்!”

“ஒரு நாளும் அப்படி நேராது!”

“நீர் எண்ணுவது தவறு! அப்படி ஒரு நாள் நேரத்தான் போகிறது!”

“பார்க்கலாமே?”

“நன்றாகப் பாரும்! அப்போது நான்தான் உம்முடைய பரிதாபத்தைப் பார்க்க இருக்கமாட்டேன்”