பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

149


ஒளவையார் சிரித்துக்கொண்டே இவ்வாறு அதியமானிடம் கூறினார்.

“என்ன? வேடிக்கையாகக் கற்பனை செய்தல்லவா கூறுகிறீர்கள்?”

“இல்லை. உண்மைதன் அதியா சந்தேகமாக இருந்தால் இதோ பாரேன்” என்று கூறிக்கொண்டே அவன் கையிலிருந்த வேலை வாங்கிக் குழந்தையின் முகத்தருகே காட்டினார் ஒளவையார் என்ன அதிசயம் குழந்தை அழுவதை நிறுத்திவிட்டு வேலையே பார்த்தது. அதியமான் வியந்து ஒளவையாரையும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தான்.

கையது வேலே காலன புனைகழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்டோட்டு
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
கரியிரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னு மாறாது சினனே யன்னோ
வுய்ந்தனரல்லரிவ னுடற்றி யோரே
செறுவர் நோக்கிய கண்டன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே (புறநானூறு -100)

மெய்-உடல், வியர்= வியர்வை, மிடறு = கழுத்து, போந்தை= பனை, வேங்கை = வேங்கைப் பூ, பித்தை = தலைமயிர், வயம் = புலி, களிறு = யானை, சினன் = கோபம், உடற்றியோர் = பகைத்துப் போரிட்டோர், செறுவர்= பகைவர்.