பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

17

(சாறு = திருவிழா, தலைக் கொள்ளல் = தொடங்குதல், பெண்ஈற்று = மனைவியின் பிள்ளைப்பேறு, மாரி ஞான்ற = மழை பெய்ய, நிணக்கும் = உண்டாக்குகின்ற, இழிசினன் = மலைமகன், போழ்துரண்டு ஊசி = கயிற்றை இழுத்துத் தைக்கும் கூரிய ஊசி, பொருநன் = பகைவன், ஆர்புனை = மாலையணிந்த, நெடுந்தகை = வீரன்)


4. தோற்றவன் வெற்றி!

‘வெண்ணிப் பறந்தலை’ என்ற இடத்தில் நிகழ்ந்த அந்தப் பயங்கரமான போரில் கரிகாலன் வெற்றி அடைந்தான். அந்த வெற்றியைக் கொண்டாடும் விழா அன்று அவையில் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது! பாவாணர் பலர் அவன் வெற்றி மங்கலச் சிறப்பைப் பாடல்களாகக் கூறிப் பாராட்டிப் பரிசு பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். எல்லோருடைய பாடல் களும் அந்தப் போரில் வெற்றி பெற்றவனாகிய கரிகாலனையே சிறப்பித்துப் பாடியிருந்தன. வென்றவனைப் பற்றி வெற்றிமங்கலம் பாடும்போது அப்படிப்பாடுவதுதானே இயற்கையும் ஆகும்?

ஆனால், இறுதியக வெண்ணிக்குயத்தியார் என்ற ஒரு புலவர், “கரிகால் வளவ! நீ இந்தப் போரிலே வெற்றிபெறவில்லை! தோற்றுவிட்டாய்” என்னும் கருத்தை அமைத்துத் துணிவாக ஒரு பாட்டைப் பாடிவிட்டார். கரிகால் வளவன் உட்பட அதைக் கேட்ட அத்தனை பேரும் திடுக்கிட்டனர். ‘வெண்ணிக் குயத்தியாருக்கு ஏதேனும் சித்தப்பிரமையோ?’ - என்றுகூட நினைத்துவிட்டனர் அவர்கள்.

வெண்ணிக் குயத்தியாரோ, சோழர் குலதிலகமே இந்தப் போரிலே உனக்குத் தோற்று, மார்பிலே பட்ட அம்பு முதுகிலே ஊடுருவியதற்காகச் சாகும்வரை வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்தானே பெருஞ்சேரலாதன், அவன்தான் வெற்றி பெற்றிருக்கிறான். நீ வென்றும் தோற்று நிற்கிறாய்!” என்றே மீண்டும் கூறினார்.