பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

27


இன்னாதுறைவி = துயரத்தோடு வசிக்கின்ற கண்ணகி, அரும்படர் = அரிய துன்பம், களைமே = போக்குவாயாக.

(மேலே கண்ட நிகழ்ச்சிகள் பாடலின் கருத்தைத் தழுவி எழுதியவை).


6. அடிப்படை ஒன்றுதான்

“உலகில் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் பரந்து வாழும் மனித குலத்திற்குள், வாழும் முறையாலும் துறையாலும் வேறு பாடுகள் காண்கிறோம். ஆனால் வாழ்க்கை என்ற ஒன்றின் மூலமான அடிப்படையில் வேறுபாடு இருக்கிறதா? ‘மனித வாழ்க்கை’ என்ற ஒரு பொதுவான தத்துவத்தில் வேறுபாடு இருப்பது பொருந்துமா? இருக்கத்தான் முடியுமா? வாழ்க்கையின் சூத்திரக் கயிறு தொடங்கும் இடத்தையே ஆராய்ந்து பார்க்க விரும்பும் இந்தத் தத்துவரீதியான வினா நக்கீரர் என்ற பெரும் புலவருக்கு எழுந்தது. இன்றைக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அவருக்குத் தோன்றிய இந்த எண்ணம், இந்த எண்ணத்தின் விளைவான உண்மை ஆகிய விவரங்களைத்தானே இப்போது வாழும் தத்துவ ஞானிகளும் காண முயன்றும் கண்டு பேசிக் கொண்டு மிருக்கின்றார்கள்?

காலம், காலத்தின் மனிதர்கள், இவர்கள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அந்தக் காலமும் அதன் மனிதர்களும் வாழ்க்கையை இயக்கிக்கொண்டு செல்லும் ‘மண்’ ஒன்றுதானே? இந்த ஒரே மண்ணை நிலைக்களனாகக்கொண்டு நேற்று அவர்கள் வாழ்ந்தார்கள். இன்று நாம் வாழ்கின்றோம். இனி நாளை வருபவர்களும் வாழ்வார்கள். எனவே நக்கீரருக்குப் பயன்பட்ட அதே ஆராய்ச்சி இன்றையத் தத்துவதரிசிகளுக்கும் பயன்படுவதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லையே? ஆதார பூமியான மண் ஒன்றாக மாறாதிருப்பதைப் போலவே வாழ்க்கையின் ஆதார சுருதியான தத்துவங்களும் என்றும் ஒரே நிலையில் இருப்பவையே!