பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

43


“இன்னமே ஒங்கப்பா வரவே மாட்டார்டா கண்ணு; வர முடியாத எடத்துக்குப் போயிட்டார்டா” அவள் குழந்தையைக் கட்டிக் கொண்டு கோவென்று கதறி யழுதாள். சிறுவனுக்கு எதுவும் விளங்கவில்லை. அவன் மிரள மிரள விழித்தான்.

“இரும்மா! வரேன்” குழந்தை வேகமாக வீட்டிற்குள் போனான்.

“எங்கேடா போறே?” சிறுவன் உள்ளேயிருந்து கையில் எதையோ எடுத்துக்கொண்டு திரும்பி வந்தான்.

அவள் பார்த்தாள். அவன் கையில் ஒரு நீண்ட வேல் இருந்தது.துக்க முடியாமல் தூக்கிக்கொண்டுவந்தான்.அவள் நீர் வடியும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“எதுக்குடா இது?”

“நான் போர்க்களத்துக்குப் போறேம்மா! அப்பாவெத் தேடப் போறேன்.”

அவள் உள்ளம் பூரித்தது. புலிக்குப் பிறந்தது பூனையாய் விடுமா? என்று எண்ணிக் கொண்டாள். தொலைவில் அன்றைய போர் தொடங்குவதற்கு அறிகுறியாகப் போர்ப்பறை முழங்கிக் கொண்டிருந்தது.

“கொஞ்சம் இருடா கண்ணு!” அவன் கையில் இருந்த வேலை வாங்கிக் கீழே வைத்தாள். உள்ளே போய் ஒரு வெள்ளை ஆடையை எடுத்துக்கொண்டு வந்தாள். போருக்குச் செல்கிறவர்கள் கட்டிக் கொள்கிற மாதிரி அதை அவனுக்குக் கட்டிவிட்டாள். கருகருவென்று சுருட்டைவிழுந்து எழும்பிநின்ற அவன் தலைமயிரை எண்ணெய் தடவி வாரினாள். அவனால் தூக்க முடிந்த வேறு ஒரு சிறு வேலை எடுத்துக் கொண்டுவந்து அவன் கையில் கொடுத்தாள்.

“நான் போயிட்டு வரட்டுமாம்மா?”

“போயிட்டு வாடா கண்ணு!”