பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

புறநானூற்றுச் சிறு கதைகள்


“நான் நெடுங்கிள்ளி மன்னரைச் சந்திக்க வேண்டும்”

காவற்காரர்கள் இருவரும் தங்களுக்குள் விஷமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டனர். ஒருவன் உள்ளே போய்விட்டுச் சில விநாடிகளில் திரும்பி வந்தான்.

“மன்னரையா பார்க்க வேண்டும்? அப்படியானால் என்னோடு வா! பார்க்கலாம்.”

ஒருவன் இளந்தத்தனைத் தன் பின்னால் அழைத்துக் கொண்டு சென்றான். ஆனால் மன்னரைக் காண்பிக்கவில்லை. அந்த அப்பாவிப் புலவனைத் தந்திரமாக அழைத்துக்கொண்டு போய்ச் சிறைக்குள் தள்ளி அடைத்துப் பூட்டிவிட்டான்.

“ஐயோ! நான் நாடோடிப் புலவன் ஐயா! எனக்கு ஒரு பாவமும் தெரியாது! என்னை ஏன் ஐயா சிறையில் அடைக்கிறீர்கள்?”

“பேசாதே! நீ இருக்க வேண்டிய இடம் இந்தச் சிறைதான்” காவற்காரன் அதட்டிவிட்டுப் போய்விட்டான். ‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிவிட்டதே’ என்று தவித்தான் இளந்தத்தன். ‘கருவூரிலிருந்து நலங்கிள்ளியைப் பார்த்துவிட்டு வந்ததாகச் சொன்னதற்கு இவ்வளவுபெரிய தண்டனை ஏன்?’ என்று அவனுக்குப் புரியவில்லை. உறையூரின் பெருமை, வந்தாரை வரவேற்று விருந்தோம்பும் சோழர் குடிப் பெருமை, எல்லாப் பெருமையின் மேலும் எரிச்சல் எரிச்சலாக வந்தது அவனுக்கு இளந்தத்தன் கருவூரிலிருந்து புறப்பட்டுவந்த சிறிதுநேரத்திலேயே கோவூர் கிழார் என்ற புலவரும் அவனைப் பின்பற்றி உறையூருக்கு வந்தார்.இளந்தத்தன் முன்பே உறையூருக்கு வந்திருப்பதை அறிந்து வாயிற்காவலர்களிடம் அவன் அடையாளங்களைக் கூறி, “இப்படி ஒரு பாவலன் சற்று முன்பு இங்கே கோட்டைக்குள் வந்தானா?” என்று வினவினார். கோவூர்கிழார் உறையூர் அரண்மனையில் எல்லோருக்கும் வேண்டியவராகையினால் காவலர்களுக்கு அவரிடம் அதிக மரியாதை உண்டு.