பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

புறநானூற்றுச் சிறு கதைகள்


“அதியா பார்த்தாயா..?” ஒளவையார் சிரித்துக்கொண்டே அவனை நோக்கிக் கேட்டார்.

“எதைக் கேட்கிறீர்கள் தாயே? யானையின் மதத்தைத் தானே?”

“ஆமாம்! அதுதான். அன்று ஏரியில் சிறுபிள்ளைகள் கொம்புகளைக் கழுவும்போது சாதுவாகத் தண்ணிரில் கிடந்த இந்த யானையின் மதம் இன்று எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது பார்த்தாயா?”

“பயங்கரம் மட்டுமா? எத்தனை உயிர்களுக்குச் சேதம் விளைவித்ததோ?”

“அதியா! நீயும் இப்படி ஒரு மதயானை போன்றவன்தான்!” அதியமான் திடுக்கிட்டான். ஒன்றும் விளங்காமல் ஒளவையாரை ஏறிட்டுப் பார்த்தான்.

“ஊர்ச் சிறுவர்களிடம் கொம்பு கழுவப்படும்போது அமைதியாகக் கட்டுண்டு கிடந்த யானையைப்போல நீ புலவர்களாகிய எங்கள் அன்புக்கு மட்டும் கட்டுப்படுகிறாய். உன் பகைவர்களுக்கு முன்னாலோ, இதோ மதம் பிடித்து ஒடும் இந்த யானை மாதிரி ஆகிவிடுவாய்...”

புதிராகத் தொடங்கிய பேச்சு, புகழ்ச்சியாக மாறியதும் அதியமான் நாணத்தோடு தலை குனிந்தான். “அரசே பாகர்கள் யானையின் மதத்தை அடக்கிவிட்டார்கள்” என்று காவலன் வந்து கூறியபோதுதான் அவன் தலை நிமிர்ந்து நோக்கினான்.

எளிமை, வலிமையின் இயைபுக்கு இது ஒரு நல்ல சித்திரம்!

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே, மற்றதன்
துன்னருங்கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே! (புறநானூறு -94)