பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

புறநானூற்றுச் சிறு கதைகள்


“என்ன?”

“நான் சொல்வதைக் கேட்டு நீ என்மேல் கோபித்துக் கொள்ளமாட்டாயே?”

“சொல்லுங்கள், உங்கள்மீதும் எனக்குக் கோபம் வருமா, என்ன?”

“இங்கே உன்னுடைய ஆயுதங்கள் மயில் தோகையால் அலங்கரிக்கப்பெற்று மாலை சூடிக்கொண்டு எண்ணெய் பூசப்பட்டு விளங்குகின்றன. காம்புகளும் நுனியும் செம்மை செய்யப் பெற்று விளங்குகின்றன. உன் படைச்சாலையைச் சுற்றிக் காவல் வைத்திருக்கிறாய். ஆனால் பாவம் இந்த ஆயுதங்கள் ஒரு முறையாவது போரில் பயன்பட்டதாகத் தெரியவில்லை. மினுமினுப்பு அழியாமல் அப்படியே புதிதாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.”

“எங்கள் அதியமானுடைய ஆயுதங்களோ,பகைவர்களோடு போர் செய்து அடிக்கடிகொல்லனின் உலைக்களத்திற்குச் சென்று செப்பம் செய்ய வேண்டியனவாக இருக்கின்றன. காம்பும் நுனியும் முறிந்தும் சிதைந்தும் ஆண்மை வெளிப்படவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன, அவன் ஆயுதங்கள். இருந்தால் செல்வத்தைப் பலர்க்கும் பகிர்ந்தளிப்பான். இல்லையானாலும் பலரோடு உடனுண்டு மகிழ்வான். ஏழைகளைக் காப்பாற்றுபவன். இவ்வளவு சிறப்புக்களையும் கொண்ட எங்கள் அரசன் அதியமானுக்கு உண்மையிலேயே வீரமுண்டு. படைச்சாலையை அழகாக அலங்கரிக்கத் தெரியாது அவனுக்கு. அவைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது மட்டும்தான் தெரியும்.”

தொண்டைமான் ஒளவையாரை நிமிர்ந்து பார்க்கத் திராணியின்றித் தலைகுனிந்தான். அவர் தன்னைச் சமாத்தியமாக அவமானப்படுத்திவிட்ட விதம் அவனை வெட்க முறச் செய்தது. ‘நீ வீரனில்லை! அழகு பார்க்க ஆயுதம் செய்கிறவன்’ - என்று மட்டந் தட்டிவிட்டார். பேச வாயில்லை அவனுக்கு: ஒளவையாருடைய தூது வெற்றி பெற்றுவிட்டது.