பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2 பூர்ணசந்திரோதயம்-3 ஆனால், என்னுடைய பிராணன் போய் விடும் என்பதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். அப்படி நான் இறக்க நேர்ந்தால், அந்தப் பழிக்கும் பாவத்துக்கும் நீங்கள்தான் பாத்திரராவீர்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. ஆகையால், என்னை உயிரோடு இருக்கச் சொல்வதும் இறந்து போகச் சொல்லுவதும் எல்லாம் இப்போது உங்களுடைய கையிலேதான் இருக்கின்றன. அகோரமான பெரும்புயலில் மகா பயங்கரமாகப் பொங்கி எழுந்து கொந்தளிக்கும் அலைகளில் கிடந்து கரைகாணாது தவிக்கும் ஒரு சிறிய படகு போலத் தங்களின்மீது கொண்ட ஆசையாகிய கடும் புயலில் அகப்பட்டு உழலும் இந்த ஏழைக்கு நீங்கள் அபயஸ்தம் கொடுத்துக் காப்பாற்றுவது உங்களைச் சேர்ந்த பொறுப்பு. கலியான:- (நிரம்பவும் பரிதாபமும் இரக்கமும் காட்டி அன்பாகப் பேசத் தொடங்கி) அம்மாளு போதும்; இந்தப் பைத்தியத்தை இவ்வளவோடு மறந்துவிடு. என்னுடைய மன உறுதியை நான் ஏற்கனவே வெளியிட்டுவிட்டேன். சூரியன் தெற்கு வடக்காகப் போனாலும், நான் என்னுடைய கொள்கையி லிருந்து ஒரு நாளும் வழுவி நடக்கமாட்டேன். ஆகையால், நீ மேன்மேலும் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசி, என் மனசை மாற்ற முயற்சிப்பது எல்லாம் வீண்பாடே அன்றி வேறல்ல. ஆகையால், அந்தச் சங்கதியை இவ்வளவோடு நிறுத்திக் கொண்டு நான் கேட்டுக்கொண்ட விஷயத்துக்கு பதில் தெரிவி. ஒரு வழியில் நீங்கள் துன்மார்க்கத்தில் இறங்குவீர்கள் என்று நினைத்து, அதிலிருந்து உங்களை மீட்க எண்ணி நான் வந்தால், என்னையே நீங்கள் இன்னொரு விதமான துன்மார்க்கத்தில் இறக்கப் பார்ப்பது தருமமா? லலிதகுமாரி தேவியின் விஷயமாக நான் கேட்டுக் கொண்டதற்கு நீ என்ன உத்தரம் சொல்லுகிறாய்? சீக்கிரமாகச் சொல். அம்மாளு:- (புரளியாக நகைத்து) நான் கேட்டுக்கொண்ட விஷயத்துக்கு நீங்கள் திருப்திகரமான உத்தரம் சொல்லவில்லை.