26
பூவின் சிரிப்பு
கள்ளமறி யாக்குழந்தை
கற்பனையில் ஆண்டானாம்
உள்ளமதில் எண்ணியவர்
உவகையுற லாகாதோ?
துன்பத்தி லேதோன்றித்
தொழும்பே வடிவானோர்க்
கின்ப விளையாட்டும்
இல்லையோ இவவுலகில்?
இந்திய சமூகத்திற்கு இதை ஒரு கேள்வியாக விட்டு விட வேண்டுமென்பதே எனது எண்ணம். சமூகத்தை இடித்துரைக்கவோ, ஏசவோ இங்கு இடமில்லை. அக்குழந்தைகளின் இழிந்த நிலை அம்மாதிரியான சிறுமைக்கும் எட்டாது தாழ்ந்திருக்கின்றது. இறைவன் உலகத்திற்கு அனுப்பியுள்ள குழந்தைகளில் இவர்கள் நம் சமூகத்திற்கு ஒரு சோதனையாக நிற்கின்றனர். அந்தச் சோதனையில் சமூகம் எவ்வாறு வெற்றி பெறுகின்ற தென்பதே கேள்வி.
இப்பொழுது கவிதையை முழுமையாகச் சேர்த்துப் படித்து எண்ணிப் பார்ப்போம்;
உப்புப் பொரிந் துதிரும்
உவர்மண் ணிடிந்த சுவர்
தப்பி நிமிர்ந் தெழுந்தால்
தலையிடிக்கும் தாழ் கூரை
மக்கி யழிந்து வரும்
வறுமை வளர் சிறுகுடிசைப்
பக்கத்தில் விளையாடும்
பாலகனைப் பாரீரோ!
கந்தலொரு கௌபீனம்
கண்டவுடல்; மற்றும் அனல்
சிந்தும் வெயில் கடுங் குளிரே
சிறுவனுக்கு மேற் போர்வை;